நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார்.
காதலர்களான முருகனும், நளினியும், புதுமணத் தம்பதிகளாகியிருந்த நேரத்தில் தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை கைதியாக செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தையை சுமந்தபடியே கடுமையான வலியுடன் காலம் தள்ளினார் நளினி.
டாக்டர்கள் குறித்துக் கொடுத்த தேதிக்கு முன்னரே நளினி அழகான பெண் குழந்தையை சிறையிலேயே பெற்றேடுத்தார். அக் குழந்தைக்கு ஹரித்திரா என்று பெயரிட்டனர். சிறையில் பூத்த மலரான ஹர்த்திராவுக்கு 2½ வயது இருக்கும் போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போது பசுமாட்டையே கண்கொட்டாமல் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார் ஹரித்திரா.
இதற்கு மேலும் தங்களது குழந்தை வெளி உலகமே தெரியாமல் சிறைக்குள் வளர வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள் ஹரித்திராவை வெளியில் தங்களது உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டனர்.
இதன் பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் ஹத்திராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து ஹரித்திராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்ற அவர், தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார். மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வரும் ஹரித்திரா, பெற்றோரின் விடுதலையாகப்போகும் தகவலால் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார். நளினி–முருகனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹரித்திரா அவர்களை சந்திப்பதற்காக சென்னை வருகிறார்.
நளினியும், முருகனும் விடுதலையாகும் தேதி தெரிந்த பின்னர், ஹரித்திராவின் பயண தேதி திட்ட மிடப்பட உள்ளது.
சென்னை வரும் அவர் தனது பெற்றோரின் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். விவரம் தெரிந்த பின்னர் தனது தாய், தந்தையை சிறைக்கு வெளியில் வைத்து முதன் முதலாக சந்திக்க உள்ளார் ஹரித்திரா. எனவே, அவர் சென்னை வரும் போது சிறப்பான வரவேற்பு அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் ஹரித்திராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.
நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்
Reviewed by NEWMANNAR
on
February 20, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment