தலைமன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 24 பேர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர்.
தமிழக மீனவர்கள் 24 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த மீனவர்கள் உடனடியாக நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தமிழக மீனவர்களின் ஐந்து படகுகளும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த இரண்டு மாதங்களில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 116 பேர் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மீனவர்கள் இரண்டு கட்டங்களாக நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.
அத்துடன் தமிழக மீனவர்களின் 26 மீன்பிடி படகுகளும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தன.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான மேலும் 32 தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாடுகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்களை சர்வதேச கடல் எல்லைகளில் இந்திய – இலங்கை கடற்படைத் தரப்புகளின் ஒத்துழைப்புடன் பறிமாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலைமன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை
Reviewed by NEWMANNAR
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment