அண்மைய செய்திகள்

recent
-

அகவை 76 இலும் மக்களுக்கு சேவையாற்றும் யாழ் ஆயர்

யாழ் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை அவர்கள் 1938.07.13ம் திகதி யாழ்ப்பாணம்,ஊர்காவற்துறையில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் யாழ்பாணம் சம்பத்திரிசியர் கல்லூரியிலும் கற்றதுடன்; குருத்துவ அழைப்பை ஏற்று 1953ம் ஆண்டு யாழ்பாணம் புனித மாட்டினார் குருமடத்திலும், பின்பு 1957ம் ஆண்டு கண்டி தேசிய குருமடத்திலும் குருத்துப்படிப்பை  கற்றுத்தேர்ந்தார்.


1963.12.21 இல் குருவாக யாழ் ஆயரினால் திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 1964 இல் யாழ்மரியன்னை பேராலயத்தில் உதவிப்பங்குத்தந்தையாக கடமையாற்றினார். 1966 தொடக்கம் 1977 வரை யாழ்பாணம் மற்றும் மன்னார் மறை மாவட்டங்களில் பங்குத் தந்தையாக கடமையாற்றினார்.

அதன்பின் வேதாகம இறையில் பட்டத்தை உரோமையில் பெற்று நாடு திரும்பியதும் 1981.07.30ம் திகதி மன்னார் ஆயராக நியமனம் பெற்று 1981.07.30ம் திகதி மடுத்திருப்பதியில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 11 வருடங்களின் பின் 1992.11.05ம் திகதி யாழ் ஆயராக பொறுப்பேற்றுக் கொண்டு இற்றைவரை தமது பணியை சளைக்காது அமைதியுடன் ஆற்றிவருகின்றார். அண்மையில் 75 வயதைப் பூர்த்தி செய்த யாழ் ஆண்டகை அவர்கள் 2013.12.21 இல் தமது குருத்துவ பொன்விழாவை எழிமையாக நினைவு கூர்ந்தார்.


வேதாகமத்தை தொடர்ந்து வாசிப்பதனால் ஆழமான அறிவு பெற்றவராக திகழ்வதுடன் இடம், காலம், நேரம் அறிந்து மக்களின் மனதைக் கவரும் வகையிலும்;; பிரசங்கிப்பதும்,தனது பிரசங்கத்தின் போது சிறிய கதைகள், உதாரணங்கள் கூறி சிறியோர் தொடக்கம் பெரியவர் வரை விளங்கிக் கொள்ளும் வகையில்; பிரசங்கிப்பதும் இவரில் காணப்படும் சிறப்பம்சமாகும்.

பல நூல்களையும் நன்கு கற்பதுடன் தொடர்புசாதனங்கள் மூலம் உலகில் நடைபெறும் நிகழ்வுகளை நன்கு அறிந்தவராகவும் அவற்றை கிரகித்து தமது மந்தையை சிறப்பாக வழிநடத்தி வருபவராகவும் உள்ளார். ஏனையவர்களின் கருத்துக்களுக்கு பொறுமையாக செவிசாய்ப்பது இவரது பண்பாகும். மரியன்னையின் செபமாலையை அனுதினம் ஓதுபவராகவும், ஏனைய குருக்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கையை நடாத்திச் செல்பவராகவும் இருந்துவருகின்றார்.

ஆயர் அவர்கள் மன்னாரில் தமது பணியை ஆரம்பித்த போது போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிப்படைந்திருந்தது. எனினும் தனது மந்தைகளை தேடி அக்காலத்து போக்குவரத்து கஷ்டங்களை பாராது யாழ் தீவகம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற இடங்களுக்கு துணிந்து செல்வதுடன், இறைவனை தவிர வேறு எவருக்கும் பயப்படாது உண்மையை பேசி வந்தார். தூர நோக்கத்துடன் சிந்திப்பவராகவும், யாழ் மறைமாவட்ட மக்களின் குரலாகவும் திகழ்ந்த இவரை நாடி வெளிநாட்டு இராஜதந்திரிகள் வருகைதருவதும் இவரின் அபிப்பிராயத்தை கேட்க அடிக்கடி இவரை சந்திப்பதுமுண்டு.

தனது வாழ்க்கைப் பயணத்தில்  1964இல் தனது தாயையும், சகோதரியையும் மீரிகமவில் நடந்த புகையிரத விபத்தில் இழந்ததுடன் மன்னார் மறைமாவட்டத்தில் கடமையாற்றும் போது 1985இல் வங்காலை பங்குத்தந்தை அருட்திரு.மேரி பஸ்ரியனை இழந்ததுடன் தனது மந்தைகளில் 60 வீதமான கத்தோலிக்கர் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்றபோதும் பெரும்துயருற்ற ஆயர் அவர்கள் தமது குருக்களில் சிலரை இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு அனுப்பி அவர்களின் ஆன்மீக தேவையை பூரத்திசெய்தார்.


மேலும் 1991இல் கொழும்பில் இருந்து மன்னார் வரும்போது தனது பங்கு தேவைகளுக்காக பாஸ்கா மெழுகுதிரிகளை எடுத்து வந்துபோது வவுனியாவில் வைத்து இராணுவத்தினரால் தூசிக்கப்பட்டதுடன் தாக்கப்பட்டார். பின்பு இராணுவ தலைமைப்பீடம் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது பெருந்தன்மையுடன் அவரை மன்னித்தார்.


1995இல் யாழ் குடாநாட்டு மக்களில் 90 வீதமானனோர ;வன்னிக்கு இடம்பெயர்ந்த போது மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக பல பாடசாலைகள், நிறுவனங்கள், வயோதிபர் இல்லங்கள், அநாதை சிறுவர் இல்லங்கள், சிறிய, பெரிய குருமடங்கள் போன்றவற்றையும் தமது பங்கு குருக்களுடன் இடம்பெயரச்செய்து தனது மந்தைபடும் கஷ்டங்களை மேய்ப்பனாக தானும் அனுபவித்து வந்தார். அக்காலத்தில் அனுபவம் மிக்க குருக்களான அருட்திரு.ஜெபநேசன், அருட்திரு.பயஸ், அருட்திரு.பிரான்சிஸ் ஜோசப்,  அருட்திரு.பாக்கியரஞ்சித், அருட்திரு.சேவியர் கருணாரட்ணம், அருட்திரு.சரத்ஜீவன், அருட்திரு.அருமைநாயகம், அருட்திரு.ஜிம்பிறவுண், அருட்திரு.லக்ஷ்மன் போன்றோர்களின் இழப்புகள் ஆயருக்கு பேரிடியாக இருந்தது.

எவ்வகை இழப்புகள் நேரிடினும் தனது முன்வைத்த காலை பின்வைக்காது குருக்களையும், அருட்சகோதரிகளையும் தனது மந்தைகளை இனம், பேதம் பாராது தம் அரவணைப்பில் வைத்திருந்ததை இலங்கை வாழ் கிறிஸ்தவ சமூகம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.

திரு. சின்கிலேயர் பீற்றர்
26- ஆஸ்பத்திரி வீதி மன்னார்,
தொ. பே.   077-2131-652






அகவை 76 இலும் மக்களுக்கு சேவையாற்றும் யாழ் ஆயர் Reviewed by NEWMANNAR on April 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.