இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகள் தலைமன்னாரில் மீட்பு. 3 பேர் கைது-Photo
கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் தெரிவித்தார்.
நேற்று(18) திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தலைமன்னார் கிராமப்பகுதியில் இருந்து கஞ்சா கடத்த நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கினர்.
இந்த நிலையில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, உதவி பொலிஸ்மா அதிபர் யு.கே.திஸாநாயக்க மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜெயரூபன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தலைமன்னார் கிராமபகுதிக்குச் சென்று தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர.
இதன் போது தலைமன்னார் கிராம கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற ஹயஸ் வாகனம் ஒன்று நிண்டதை கண்ட பொலிஸார் குறித்த வாகனத்திற்கு அருகாமையில் சென்று வாகனத்தில் இருந்த 3 பேரிடம் விசாரனைகளை மேற்கொண்டதோடு வாகனத்தையும் சோதனையிட்டனர்.
-இதன் போது வாகனத்தில் காணப்பட்ட உடுப்பு பேக்கினுள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் போது உருக்கப்பட்டு கட்டியாக்கப்பட்ட 56 தங்கத்துண்டுகள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்கத்துண்டுகள் 11கிலோ 828 கிராம் நிறை கொண்டது என தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த தங்கக்கட்டிகள் தலைமன்னார் கடல் வழியாக இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 3 பேரும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 6 கையடக்கத்தொலைபேசிகள் மீட்கப்பட்டதோடு அவர்கள் பயணம் செய்த கருப்பு நிற ஹயஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பதில் பொறுப்பதிகாரி ஏ.வி.எஸ்.சம்பிக்க குறித்த நபர்களிடம் முழுமையான வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகள் தலைமன்னாரில் மீட்பு. 3 பேர் கைது-Photo
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:
No comments:
Post a Comment