ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு பூலோகநாயகி உடனுறை வேகாவனேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்) தேவஸ்தானத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சித்திரத்தேரின் வெள்ளோட்டத் திருவிழா மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன
நிகழும் பராபவ வருடம் ஆனித் திங்கள் 13 ஆம் நாள் (27.06.2026) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இத்திருவிழாவோடு இணைந்து, இந்த ரதத்தை வடிவமைத்த சிற்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வும் இடம்பெறவிருக்கிறது.
பக்தர்களின் மனதைக் கவரும் வகையில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சித்திரத்தேரை, யாழ்ப்பாணம் திருநெல்வேலி காளி கோயிலடியில் உள்ள 'அர்த்தநாதீஸ்வரர் சிற்பாலயம்' பத்மநாதன்- சுரேந்திரன் (குழுவினர்) வடிவமைத்துள்ளனர். ரத நிர்மாணத் திலகம், சிற்பகலா சிம்மம், சிற்பகலாநிதி, சிற்ப கலாஜோதி, சிற்ப வாருதி உள்ளிட்ட பல பெருமைகளைத் தாங்கிய வல்லுநர்களால் இத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தத் தேருக்கான கண்கவர் வர்ண வேலைகளை திருநெல்வேலி 'ஸ்ரீ காமாட்சி அம்பாள் கலைக்கூடம்' செல்லையா செல்வதாஸ் குழுவினர் மிக நேர்த்தியாகச் செய்துள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வில் பேரன்பிற்குரிய சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு
இவ் வெள்ளோட்ட விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புடன் மேற்கொண்டு வருகின்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:


No comments:
Post a Comment