அதிக தற்கொலை நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்
தற்கொலை தவிர்ப்பு சம்பந்தமாக உலக சுகாதார கழகம் முதல் தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு இலட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று விவரம் வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் முக்கால் பங்களவு வறுமை அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருகிறது.
குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் தற்கொலைகள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நடக்கின்றன.
உலகில் நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு, வடகொரியா, இந்தியா இந்தோனேஷியா நேபாளம் ஆகிய நாடுகளில் அதிகளவில் இடம்பெறுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
விகிதாசார ரீதியில் அதிக தற்கொலை நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு இலட்சம் பேருக்கு 28.5 தற்கொலைகள் என்ற வீதத்தில் இலங்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. இதில் 11 இடத்தில் உள்ள இந்தியாவில் இந்த வீதம் 21.1ஆக உள்ளது.
15 – 29 வயது வரையிலானோரின் மரணங்களுக்கு முக்கிய காரணமாக தற்கொலையே காணப்படுகிறது, அதேநேரம் உலகில் பல இடங்களில் அதிகம் தற்கொலை செய்துகொள்வோர் என்றால் அது 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்கொலைக்குப் பயன்படக்கூடிய பொருட்களை உதாரணத்துக்கு பூச்சிக்கொல்லிகள், சில மருந்துவகைகள், துப்பாக்கிகள் போன்றவற்றை எண்ணியவுடன் எளிதில் பெற முடியாது என்ற நிலையை உருவாக்கினால் தற்கொலைகளையும் தற்கொலை முயற்சிகளையும் குறைப்பதில் ஓரளவுக்கு வெற்றி காண முடியும் என இந்த அறிக்கை கூறுகிறது.
தற்கொலை என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை என வர்ணித்துள்ள இந்த அறிக்கை, இதனை எதிர்த்துப் போராடவும், கட்டுப்படுத்தவும் வேண்டும் எனக் கூறுகிறது.
அதிக தற்கொலை நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:


No comments:
Post a Comment