அண்மைய செய்திகள்

recent
-

இராணுவம் இருக்கின்ற காணி மக்களுக்குரியது -ஈச்சலவக்கையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

உங்கள் வீதியை புனரமைத்து தர வேண்டியது எனது அமைச்சின் பொறுப்பு.இதை விரைவில் செய்து தர இருக்கின்றோம்.ஆகவே ஆக்க பொறுத்த நீங்கள் ஆற பொறுங்கள் சில காலத்துக்கு எங்களுக்கு அவகாசம் தாருங்கள் உங்கள் முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சலவக்கை கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்காக வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை(30) அக்கிராமத்திற்கு சென்றனர்.

இதன் போது உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் உரையாற்றுகையில்,,,,,

இங்கு நடைபெறும் கூட்டத்தின் முறைமையைப் பார்க்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

நான் பல கூட்டங்களுக்குச் சென்றிருக்கின்றேன் இது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான கூட்டமாக இருக்கின்றது. இங்கு மக்கள் அமைதியாக இருந்து செவிமடுத்ததைப் போன்று நான் எங்கும் காணவில்லை.

திட்டமிட்டு மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்ட ஒரு கூட்டம் என்றால் நான் இதைத்தான் கூறுவேன்  இயற்கை வாசனை ஒன்று இங்கு எனக்கு புலப்படுகிறது. அதற்காக உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இங்கு பேசியவர்கள் வட மாகாண முதல்வர் அமைச்சர்கள் அனைவரும் இங்கு சமூகமளித்திருப்பதால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வினோ பேசினார் ஆனால் நாங்கள் இப்பொழுது உங்கள் குறைகளை இங்கு எடுத்து வைத்திருக்கின்றோம்.

 ஆனால் இதை தடுத்து நிறுத்துவகற்கு அரசாங்கம் எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

ஆனால் அவற்றை முடித்து வைப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

 இத்தனை காலமாக நீங்கள் ஆக்கப் பொறுத்தீர்கள் இப்பொழுது ஆறப்பொறுங்கள் காரணம்  பல விதமான கஷ்டங்களை நாங்களும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

முக்கியமாக நிதி சம்பந்தமான பிரச்சனை எங்களுக்கு இருக்கின்றது.

அத்துடன் வட மாகாணத்தில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஓர் அரசை மக்கள் நிறுவியிருக்கின்றார்கள். இதனால் அரசாங்கத்தின் பல விதமான விமர்சனத்துக்கும் தாக்கத்துக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

 வடமாகாணத்தில் தெருக்கள் சம்பந்தமாக நோக்கினோம் என்றால் 6 ஆயிரம்(6.000) மில்லியன் ரூபா பணம் இருந்தால்தான் அவ்வாறான தெருக்களை சரிப்படுத்தி மக்களுக்கு கொடுக்க முடியும்.

அந்தளவுக்கு எங்களுக்கு நிதி கிடைக்குமோ என்பது தெரியாது.

 நாங்கள் அடுத்த வருடம் தெருக்களுக்கு இவ்வளவு பணம் தேவையென ஒரு தொகையை கேட்டிருக்கின்றோம்.

 அவர்கள் எவ்வளவு தரப்போகின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது ஆனால் கிடைப்பதைக் கொண்டு நாங்கள் செய்வதை செய்து கொண்டுதான் வரப்போகின்றோம்.

உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓர் முக்கிய அடிப்படை பிரச்சனையாக இருப்பது உங்களுக்கான வீதி. இந்த வீதி சிறந்த முறையில் இருக்குமானால் மற்றைய பிரச்சனைகள் தானாக தீர்ந்து விடும்.

 உங்களுடைய கிராமத்திற்கு 8 அல்லது 10 நிமிடத்தில் வர வேண்டியதற்குப் பதிலாக ஒரு மணித்தியாலம் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது.

 இதனால் தான் சுகாதாரம்,வாழ்வாதாரம்,கல்வி என பல விதமான பிரச்சனைகளையும் எதிர் நோக்குகின்றீர்கள்.

இருந்த போதும் நீங்கள் எதிர்நோக்கும் கல்வி போக்குவரத்து சுகாதாரம் சம்பந்தமாக எமது அமைச்சர்கள் கவனம் செலுத்தியுள்ளார்கள்.
நாங்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம். 

விவசாயத்தை பொருத்த மட்டில் இங்குள்ள குளத்தை இராணுவம் கைப்பற்றி வைத்திருப்பதால் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றீர்கள். இப்படியான ஒரு இராணுவ முகாம் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை தன்வசம் வைத்துக் கொண்டு இப் பகுதியில் இருக்க வேண்டுமா??? என்ற கேள்வி எழுகின்றது.

இதனால் தான் இராணுவத்தை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரலை எழுப்பிக் கொண்டு வருகின்றேன். இராணுவ அதிகாரிகள் என்னுடன் பேச வரும்போது நான் அவர்களுக்கு தெரியப்படுத்துவது என்ன வென்றால் உங்களுக்கும் எங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். நீங்களும் எங்களுடைய சகோதரர்கள் தான் ஆனால் இராணுவம் ஒரு இடத்தில் வந்து இருக்கும் போது எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நாம் பார்க்க வேண்டும்.

 இராணுவம் இருக்கின்ற காணி மக்களுக்குரியது. அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கக் கூடிய காணி அப்படிப்பட்ட காணியை நீங்கள் வைத்துக் கொண்டிருந்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை சிலர் ஏற்றுக் கொள்கின்றனர்.

 இன்னும் சிலர் மௌனம் சாதிக்கின்றனர். இவர்கள் எதிர்ப்பாக எதையும் கூறுவதில்லை.

ஆனால் அவர்கள் எதிர்ப்பாக இருக்கின்றார்கள். காரணம் என்ன வென்றால் எல்லா இடங்களிலும் அரசியல் புகுந்து விட்டது. அரசியல் காரணமாக இராணுவத்தை இங்கு வைத்திருப்பதால் எங்கோ இருக்கின்ற மாகாணத்தில் இவர்களுக்கு வாக்கு கிடைக்கின்றது.

 எப்படியென்றால் நாங்கள் தமிழ் மக்களை அடக்கி வைத்து ஆண்டு கொண்டிருக்கின்றோம். என்று எடுத்துக் காட்டியே வாக்குகளை சேகரித்துக் கொள்ளுகின்றனர்.

ஆகவே இந்த இராணுவம் தொடர்ந்து எமது பகுதியில் இருக்க வேண்டுமா? என்று பல விதமாக சிந்தனையில் ஆழ்ந்து இக்கின்றோம்.

அத்துடன் வெளிநாடுகளிலும் தெரிவித்து வருகின்றோம். இது சம்பந்தமாக அரசுக்கு நெருக்குவாதத்தை கொடுத்து வருகின்றோம்.

தொடர்ந்து இவ் நெருக்குவாதத்தை கொடுப்போம் இதன் மூலம் இந்த இராணுவத்தை வெளியேற்ற முடியுமென்றால் உங்களுக்குரிய  காணி உங்களுக்கு கிடைக்கும்.

நேற்றுத்தான் எனக்கு தெரிய வந்தது 20000 படிவங்களைக் கொண்டு எமது மாண்பு மிக்க ஐனாதிபதி எதிர்வரும் 13ஆம் திகதி இப் பகுதிக்கு வருகின்றார் எனவும்  மக்களுக்கு காணிகள் வழங்கப் போகின்றார் எனவும் எந்தந்த காணியை யார் யாருக்கு கொடுக்கப் போகின்றார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும் குறிப்பிட்ட ஆட்களுக்கு தங்களுடைய அரசியலில் நன்மை பெறக் கூடியவர்களுக்கு வழங்கக் கூடும்.

 இவ்வாறான காணிகளைக் கொடுக்கும் போது சட்டம் சம்பந்தமான பெறுமதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

அதாவது ஒரு நாட்டின் ஐனாதிபதிக்கு தான் தோன்றித்தனமாக எல்லா இடத்திலும் இருக்கும் அரச காணிகளை எடுத்து மக்களுக்கு கொடுக்க முடியுமென்றால் இங்கு இருக்கும் மக்களை விடுத்து தெற்கில் இருக்கும் மக்களுக்கு யாருக்காவது கொடுத்தால் நாங்கள் இவற்றைப் பற்றி கேட்க முடியாதிருக்கலாம்.

 உண்மையின் படி சட்டத்தை நாங்கள் பார்ப்போமானால் அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்குத்தான் உரித்துடையது. அக் காணி அரச சொத்தாக இருந்தாலும் நம்பிக்கை பொறுப்பாக அந்த ஊர் மக்களுக்காகத்தான் வைத்திருக்கின்றார்கள் வெளியிலுள்ள மக்களுக்கு கொடுக்க அவர்களுக்கு  முடியாது.

ஆகவே இதுவிடயமாக நாங்கள் அலசி ஆராய வேண்டியுள்ளது .இது விடயமாக நாங்கள் நீதிமன்றத்தை தேடி செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

அடுத்து நிதி பற்றாக் குறையாக இருப்பதால்தான் உங்களுடைய பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாதிருக்கின்றோம் இது விடயமாக வேறொரு விடயத்தை நாங்கள் கருத்தில் எடுத்திருக்கின்றோம். 

சாவகச்சேரியில் சுய உதவி அதாவது சிரமதானம் மூலம் சில சில வேலைத்திட்டங்களை நாங்கள் மக்களோடு கிடைக்கின்ற வருமானங்களை நிதி உதவிகளை வைத்து செயல் படுத்த முடியுமா என்பதைப்பற்றி செயல் படுத்த முனைகின்றோம்.


அதாவது அங்கு இருக்கும் குளம் ஒன்று அதை அண்டிய சுற்றாடல்களை மக்களின் துணையோடு சுத்தப்படுத்தி அதை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியுமா என்று நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அநேகமாக அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் .ஆகவே சிரமதான அடிப்படையில் நிதி பற்றாக் குறையிருந்தாலும் மக்களின் உதவியுடன் மக்களின் சக்தியோடு முன்னேற முடியும் என்பதை எடுத்தக்காட்ட இருக்கின்றோம்.

நாங்கள் ஒரு வருட ஆட்சியில் பலவிதமான கஷ்டத்துக்குள் எதிர்நோக்கி இருக்கின்றோம் .இருந்தும் உங்களின் பிரச்சனைகளையும் கருத்தில் எடுத்திருக்கின்றோம்.

 அத்துடன் இப் பகுதியில் இந்து கிறிஸ்தவ மக்கள் தான் இருப்பதாக தெரிவித்தீர்கள். இங்கு வழிபாட்டு தள வதிகள் இல்லையென தெரிவித்தீர்கள்.

 மின்சாரம் ஐம்பது பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்றட்டவர்களுக்கு வழங்கப்படவல்லையென தெரிவிக்கப்பட்டது.

இவைகள் எல்லாம் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வைகரைப்பகுதியில் முள்ளந்தண்டால் பாதிப்படைந்தவர்களுக்கு வைத்திய நிலையம் ஒன்று உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

 ஆகவே போர் காலத்தின்போது முள்ளந் தண்டு பாதிப்படந்தவர்கள் இருந்தால் இந்த இடத்துக்குச் சென்று சிகிச்சை பெற முடியும் இதற்கான வசதிகளை எமது சுகாதார அமைச்சர் செய்திருக்கின்றார்.

அத்துடன் உங்கள் வீதியை புனரமைத்து தர வேண்டியது எனது அமைச்சின் பொறுப்பு .இதை விரைவில் செய்து தர இருக்கின்றோம் .ஆகவே ஆக்க பொறுத்த நீங்கள் ஆற பொறுங்கள் சில காலத்துக்கு எங்களுக்கு அவகாசம் தாருங்கள் உங்கள் முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்தது வைப்பேன் என தெரிவித்தார்.
இராணுவம் இருக்கின்ற காணி மக்களுக்குரியது -ஈச்சலவக்கையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். Reviewed by NEWMANNAR on October 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.