நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞன் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு- மன்னார் நீதிமன்றத்தில் சம்பவம்-Photo
தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த இளைஞன் மயங்கி விழுந்த சம்பவம் மன்னார் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
தலைமன்னார் பகுதியில் கடந்த 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் எஸ்.அமலன்(வயது-23) என்ற இளைஞர் இரவு நேர கடற்தொழிலுக்குச் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இதன் போது குறித்த இளைஞனின் பெற்றோரும் வெளியில் வந்துள்ளனர்.இதன் போது சிவில் உடையில் வந்த தலைமன்னார் பொலிஸார் குறித்த இளைஞனை பிடித்து பெற்றோருக்கு முன்னிலையில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
பின் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு பார்க்க சென்றுள்ளார்.
இதன் போது அங்கு கடமையில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞனை தாம் விடுதலை செய்வதாகவும்,ஆனால் தமது வசம் உள்ள கஞ்சாப்பொதியினை தன்னுடையது என உரிமை கோருமாறு பொலிஸார் அந்த இளைஞரை வற்புறுத்தியுள்ளனர்.அதற்கு குறித்த இளைஞர் மறுப்புத் தெரிவிக்க குறித்த இளைஞர் மீதும் பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
பின் போலி வழக்கை பதிவு செய்ய தலைமன்னார் பொலிஸார் குறித்த இளைஞர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முகமாக குறித்த இரு இளைஞர்களையும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு தமக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பிலும் கொடுமைகள் தொடர்பிலும் வைத்தியரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
பின் குறித்த இருவரும் நேற்று வியாழக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதலில் எஸ்.அமலன் என்பவருடைய வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த இளைஞர் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் விசாரணைக்கூண்டில் நிறுத்தப்பட்டடார்.
குறித்த இளைஞர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிராய்வா,ரி.வினோதன் ஆகியோர் ஆஜராகி குறித்த இளைஞர்கள் மீது பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ அறிக்கை உள்ளதாகவும் சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன்போது குறித்த வைத்திய அறிக்கையை நீதவான் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட எஸ்.அமலன் என்ற இளைஞன் மயங்கி விழுந்தார்.
உடனடியாக மன்னார் நீதவானின் பணிப்புரைக்கு அமைவாக நீதவானின் வாகனத்தில் குறித்த இளைஞன் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டாவது நபரான மற்றைய இளைஞர் நீதவான் முன்னிலையில் அஜர் படுத்தப்பட்ட போது 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,,,,
குறித்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்த போது அவர்களிடம் கஞ்சா இருக்கவில்லை.தலைமன்னார் பொலிஸார் அவர்களை கஞ்சா வைத்துள்ளதாக கூறியே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு தலைமன்னார் பொலிஸாரிடம் இருந்த கஞ்சாப்பொதியை குறித்த இளைஞர்கள் வைத்திருந்ததாக கூறியே குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் செயற்பாடு மனித நேயமற்ற செயல் எனவும் குறித்த சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞன் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு- மன்னார் நீதிமன்றத்தில் சம்பவம்-Photo
Reviewed by NEWMANNAR
on
October 17, 2014
Rating:

No comments:
Post a Comment