வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள்
பெரும்பாலான அரசாங்க நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதி உரிய காலத்தில் செலுத்தப்படுவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொழில் உறவுகள் அமைச்சுக்கான வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன, தொழில் திணைக்களம் மந்தகதியிலேயே இயங்குவதாக குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, மனித வளங்களை கையாளும் நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இந்த விவாதத்தில் இணைந்துகொண்டு, விமான நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துகளை கூறினார்.
இதன்போது பிரதியமைச்சர் சரத் வீரபண்டார பதிலளித்தார்.
இதேவேளை, ஏற்றுமதி தொழிற்துறையை மேம்படுத்துவதாயின், அதற்குரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.
தேர்தலொன்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீரழிவிற்கு உட்படுத்தக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பகிரப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:


No comments:
Post a Comment