தமிழகத்தில் கைதான இலங்கை உளவாளி ஜாகீர் ஹுசேய்ன் தொடர்பில் இந்தியா விசாரணை
பாகிஸ்தான் உளவாளி என தமிழகத்தில் கைதான இலங்கையரான ஜாகீர் ஹுசேய்ன் விவகாரம் தொடர்பில், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இருவரிடம் விசாரணைகளை நடத்துவதற்கு இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன் பிரகாரம் ஜாகீர் ஹூசேய்னின் முக்கிய சகாவான ஒருவரிடமும், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இருவரிடமும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
ஜாகிர் ஹுசேய்னின் சகா, மலேஷியாவில் மறைந்திருப்பதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கு தூதரக மட்டத்திலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளது அறிவுறுத்தலின் பிரகாரம் தமிழகத்தில் உளவு பார்த்ததையும், போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விட்டதையும் ஜாகிர் ஹுசேய்ன் ஏற்கனவே ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜாகிர் ஹுசேய்னுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் வழக்கறிஞர் இந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கைதான இலங்கை உளவாளி ஜாகீர் ஹுசேய்ன் தொடர்பில் இந்தியா விசாரணை
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:


No comments:
Post a Comment