தாய், பிள்ளை மீது மோதிய மன்னார் தனியார் பஸ்! சம்பவத்தை சமாதானமாக்கிய அதிகாரிகள்-Photos
மன்னார் பஸார் பகுதியில் நின்ற தாய் மற்றும் குழந்தை ஆகியோரை மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்து ஒன்று நேற்று (01-01-2015) வியாழக்கிழமை மாலை மோதிய போதும் குறித்த இருவரையும் சமாதான உடன்படிக்கையில் ஈடுபட சிலர் முயற்சி செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று(01) வியாழக்கிழமை மாலை 4.50 மணியளவில் மன்னார்-வவுனியா என்ற பெயர்ப்பலகை பொருத்தப்பட்ட தனியார் பேரூந்து ஒன்று தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து வேகமாக வெளியில் வந்த போது மன்னார் பஸார் பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள மஞ்சள் கோட்டு கடவைக்கு அருகாமையில் இளம் தாய் ஒருவர் தனது சிறு குழந்தையுடன் நின்ற போது அவர்கள் மீது குறித்த பஸ் மோதியுள்ளது. இதன் போது தாயும், பிள்ளையும் கீழே விழுந்துள்ளனர்.
தாய் ,குழந்தை அருகில் நின்ற ஒருவர் என மூன்று பேர் மீது பஸ் மோதி அவர்கள் கீழே விழுந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். சம்பவத்தையும் நேரடியாக பார்த்துள்ளனர்.
எனினும் குறித்த பேரூந்தை செலுத்தி வந்த சாரதி திடீர் என பஸ்ஸில் இருந்து தப்பிச் சென்று விட்டார். அவர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக குறித்த தாயும், குழந்தையையும் முச்சக்கர வண்டியில் ஏற்றி மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்களை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லவில்லை.
இந்த நிலையில் மன்னார் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட போதும் சுமார் 30 நிமிடங்களின் பின்னரே அந்த இடத்திற்கு வந்தனர்.
பொலிஸார் வருவதற்கு முன் குறித்த பஸ்சினை அந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டனர். பின் பொலிஸார் வந்து குறித்த பேரூந்தையும் பிறிதொரு சாரதியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சம்பவம் இடம் பெற்ற நேரத்தில் இருந்து சுமார் மாலை 4.55 மணிக்கு மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சுமார் 5.30 மணியளவில் வைத்திய சாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அந்த நேரத்திற்குள் குறித்த தாயுடன் சிலர் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.
பின் வைத்தியசாலைக்கு குழந்தையை அழைத்துச் சென்ற தாய் தனது பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதிக்காது அழைத்துச் செல்வதாக மன்னார் வைத்திய சாலை தரப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் தாயாரது வேண்டு கோளுக்கு அமைவாக அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின் குறித்த தாயும், குழந்தையும் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சமாதான வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தாயும் பிள்ளையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின் சாரதி விடுதலை செய்யப்பட்டதோடு பஸ்ஸினையும் பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்களின் மத்தியில் இடம் பெற்ற குறித்த விபத்தை அவ்விடத்தில் நின்ற பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் சட்டத்திற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நடவடிக்கை எடுக்காது குறித்த பஸ்ஸின் சாரதி சார்பாக அவ்விடத்தில் கதைத்து தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம் பெற்று பல மணி நேரத்தின் பின் பொலிஸார் அவ்விடத்திற்கு வந்தமை குறித்தும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு உள்ளே செல்லும் பேரூந்துகளும், தரிப்பிடத்தில் இருந்து வெளியே செல்லும் பேரூந்துகளும் வேகமாக செல்வதாகவும் பாதசாரிகளுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக பாதசாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே வடமாகாண போக்குவரத்து அமைச்சர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாய், பிள்ளை மீது மோதிய மன்னார் தனியார் பஸ்! சம்பவத்தை சமாதானமாக்கிய அதிகாரிகள்-Photos
Reviewed by NEWMANNAR
on
January 02, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 02, 2015
Rating:



No comments:
Post a Comment