மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக எதிர்வரும் 5 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.-Photos
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் முகவராக செயற்பட்டு வருவதோடு தற்போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலையங்களை மூடுவதாகவும்,அபிவிருத்திகளை தடை செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அரசாங்க அதிபர் அரச அதிகாரிகளையும்,மக்களையும் பயமுறுத்தி வருவதாகவும்,மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்யுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் சிலிட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 57 தையல் பயிற்சி நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தையல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.ஒரு பயிற்சி நிலையத்தில் 20 பயிற்சியாளர்கள் வீதம் 1140 பயிற்சியாளர்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 21 பயிற்சி நிலையங்களும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 14 பயிற்சி நிலையங்களும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 பயிற்சி நிலையங்களும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 9 பயிற்சி நிலையங்களும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 7 பயிற்சி நிலையங்களும் ஆராம்பிக்கப்பட்டு இயங்கி வந்தது.
குறித்த பயிற்சி சிலையங்களுக்கு 57 தையல் பயிற்சி ஆசிரியர்களும்,57 பயிற்சி நிலைய பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்ததோடு பயிற்சி நிலைய மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் அணைவரும் கடந்த இரண்டு மாத சம்பளத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலே அரசாங்க வேளைத்திட்டத்தின் கீழ் சிலீட்டா அமைப்பின் நிதி உதவியுடன் இடம் பெற்று வந்த குறித்த தையல் பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் அரசாங்க அதிபர் பூட்டியுள்ளதாகவும்,பயிற்சி நிலையங்களில் உள்ள தையல் இயந்திரங்களை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்,அதற்கு பயிற்சி நிலைய மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை எனவும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நடு நிலமை வகிக்காது மஹிந்த ராஜப்கஸ அவர்களின் முகவராக செயற்படுவதோடு அவரின் வெற்றிக்காக செயற்பட்டு வருகின்றார்.
சுமூர்த்தி பயனாளிகள்,மக்கள் ஆகியோரையும்,தையல் பயிற்சி நிலைய மாணவர்களையும் அச்சுறுத்தி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்காக வேலை செய்யுமாறு வற்புறுத்துகின்றார்.
எனவே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் குறித்த செயற்பாட்டை கண்டித்தும்,நிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள்,தையல் பயிற்சி நெறிகள் ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிக்க கோரியும்,அரசாங்க அதிபரின் இந்த தன்னிச்சையான முடிவை மாற்றக்கோரியும் தையல் பயிற்சி நிலைய மாணவர்கள்,மன்னார் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் திகதி காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக எதிர்வரும் 5 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
January 02, 2015
Rating:

No comments:
Post a Comment