வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு புனர்வாழ்வு செயற்திட்டம்-Photos
வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கடந்த 30 வருட சிவில் யுத்தத்தில் அகப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்டு, விசேட தேவையுடையவர்களாக அண்ணளவாக 42,000 பேர் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருவதாக தரவுகள் உள்ளது.
எனினும் இவர்கள் தொடர்பான முழுமையான தரவு திரட்டுதல் தமது அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு மற்றும் சமூகசேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய, சமூக சேவைகள், புனர்வாழ்வு, சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் விசேட தேவையுடையவர்களுக்கான “இணையும் கரங்கள்” அமைப்பின்; ஏற்பாட்டில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
இதுவரை மாகாண அமைச்சின்கீழ் புனர்வாழ்வு அமைச்சு என்றொரு அமைச்சு இயங்கவில்லை. கடந்த பெப்ரவரி மாதமே எனது அமைச்சின்கீழ் புனர்வாழ்வு மற்றும் சமூக சேவைகள் அமைச்சுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றைய யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இவ்வாறாக புனர்வாழ்வு, சமூக சேவைகள் அமைச்சுகள் பாரிய பொறுப்புடன் இயங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது எம்மிடம் இவர்கள் தொடர்பான சரியான தகவல்கள் இல்லை. கடந்த அரசில் இவ்வாறானவர்களை சந்தித்து உரையடுவதற்கே அனுமதி இருக்கவில்லை.
தற்போது சூழ்நிலையில் சிறிது மாற்றம் இருப்பதாக உணருகின்றோம். பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் வேறுபட்டதாகவுள்ளது. எனவே தேவை தொடர்பில் சரியான தரவுகள் திரட்டப்படுதல் வேண்டும். தரவுகள் திரட்டப்பட்டதும் முழுமையான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
அண்மையில் வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டமொன்றினை எனது அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அத்துடன் விரைவில் விசேட தேவையுடையவர்களுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையொன்றினை மாங்குளத்தில் ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளோம்.
தற்போது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மலசலகூடங்கள் அமைக்கும் பணி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளோம்.
இதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவகள் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். ஏதிர்காலத்தில் எமது அமைச்சினூடாகவும் இந்த செயற்திட்டத்தை மாகாணத்தின் அமைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச சபையின் உபதலைவர் தணிகாசலம், இலங்கை வங்கியின் மன்னாள் முகாமையாளர் நோய் ஜெயக்குமார், இணையும் கரங்கள் அமைப்பின் தலைவர் என பலர் கலந்துகொண்டனர்.
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு புனர்வாழ்வு செயற்திட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
April 28, 2015
Rating:
No comments:
Post a Comment