மன்னாரில் தடை உத்தரவை மீறி உணர்ச்சிபூர்வமாக இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.-Photos
மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட இருந்த உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கு மன்னார் நீதிமன்றம் இன்று(18) திங்கட்கிழமை தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும்,குறித்த அஞ்சலி நிகழ்வு பிரிதொரு இடத்தில் மிகவும் எழுச்சியாக நினைவு கூறப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18) காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த அஞ்சலி நிகழ்வை நிறுத்த மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தினால் குறித்த அஞ்சலி நிகழ்வை மன்னார் நகர மண்டபத்தில் நடாத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த தடை உத்தரவிற்கான காரணமாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம் பெற்ற இறப்புக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பொது சொத்துக்களுக்கும்,மக்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் இல்லா விட்டாலும்,கலவரம் அல்லது பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பெரும்பாலும் இடம் இருப்பதால் இந்த நிகழ்வை மன்னார் நகர மண்டபத்தில் நடாத்தாது இருப்பதற்கு என்னால் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை பிரிவு 106 இன் கீழ் இடப்படுகின்றது.
இந்த சட்டத்தை மீறினால் இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 ஆம் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த உத்தரவின் பிரதி இன்று(18) திங்கட்கிழமை காலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்னார் நகர சபை மண்டப கதவில் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்த ஏற்பாட்டுக்குழுவினர் குறித்த நிகழ்வை மன்னார் நகர மண்டபத்தில் நடத்தாது உடனடியாக உப்புக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இடம் பெற்றது.
இதன் உப்புக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக பூசை வழிபாடு இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து ஆலய முன்றலில் 'சுடர்' ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கலந்து கொண்ட மக்கள் மெழுகுதிரி ஏற்றி பூ வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து சர்வமத தலைவர்களினால் சர்வமத பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் நகர சபையின் முன்னால் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் பிரதேச சபையின் முன்னால் தலைவர் மாட்டின் டயேஸ்,முன்னால் உள்ளராட்சி மன்ற உறுப்பினர்கள்,சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், பொது மக்கள்,மதத்தலைவர்கள் என பலர் பலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இது இவ்வாறிருக்க மன்னார் நகர் பகுதியின் முக்கிய இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது...
மன்னாரில் தடை உத்தரவை மீறி உணர்ச்சிபூர்வமாக இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 18, 2015
Rating:
No comments:
Post a Comment