தமிழர்களின் பண்பாட்டம்சங்களை இல்லாதொழிக்கும் சதி திரைமறைவில் இடம்பெறுகின்றது: அரியநேந்திரன் சாடல்
விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் திட்டமிட்ட முறையில் தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டம்சங்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகளும் ஒழுக்க சீர்கேடுகளுமே இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோயில் போரதீவு இளைஞர் எழுச்சி மன்றத்தினால் கல்வியில் சாதனைப் படைத்தோரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கோயில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஒரு இனத்தின் கலை மற்றும் பண்பாடுகள் அந்த அந்த இனத்தினாலேயே முன்னெடுக்கப்படவேண்டும்.
அப்போதுதான் அந்தக்கலைகள் பேணப்படும் இல்லாவிடின் அது அழிவடைந்து போய்விடும் அந்தவகையில் தமிழர்களின் பாரம்பரியங்களை கட்டிக்காக்கவேண்டியது இன்றைய இளைஞர்களின் பொறுப்பாகும் .
ஒரு நாட்டின் தலைவிதி என்பது அந்நாட்டில் வாழுகின்ற இளைஞர்களின் கைகளிலே தங்கியுள்ளது. கடந்தகால போராட்ட வரலாறுகளில் எமது பாரம்பரிய கலை பண்பாடுகள் இந்த நாட்டை ஆட்சிசெய்த பேரினவாத அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
ஆனால் இன்று போர் மௌனித்ததன் பின்னரும் வடக்கு கிழக்கு இளைஞர்கள் போதைவஸ்து பாவனைக்கும்,மதுபாவனைக்கும் தள்ளப்படும் சதி, திரை மறைவில் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடு வடகிழக்கு தமிழ் இளைஞர்களின் கலை மற்றும் பண்பாடுகளை சீரழித்து தமிழ் தேசிய உணர்வை மழுங்கடித்து,எம்மைக் கொண்டு எம்மை அழிக்கும் செயலாகவே இதனை நாம் பார்க்கமுடியும் .
இதனால் தமிழ்மக்கள் மிகவும் அவதானமாக பாடசாலை மாணவர்களும்,பெற்றோர்களும், இளைஞர்களும் விழிப்பாக செயற்படவேண்டும் அப்போதுதான் இவ்வாறான சீர்கேடுகளில் இருந்து எம்மைப் பாதுகாக்கமுடியும்.
அண்மைக்காலமாக வெளியாகிய செய்திகளைப் பார்க்கின்றபோது, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை புரியும் நிகழ்வுகளும், தமிழ் மாணவிகளை தமிழர்களே கற்பழித்து கொலைசெய்யும் சம்பவங்களும் போர் மௌனித்த பின்னர் இடம்பெறுகிறது.
ஆனால் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் இடம்பெற்ற காலத்தில் வடகிழக்குத் தமிழ்மக்கள் மற்றும் இளைஞர்களின் ஒழுக்கம் சீரழியவில்லை 2009 மே 19 திகதி போர் மௌனிக்கப்பட்ட பின்னரே வடக்கு கிழக்குப்பகுதியில் திட்டமிட்ட சீர்கேடுகள் இடம்பெறுகிறது, இந்த சதி வலையில் நாம் சிக்கிவிடக் கூடாது என அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் பண்பாட்டம்சங்களை இல்லாதொழிக்கும் சதி திரைமறைவில் இடம்பெறுகின்றது: அரியநேந்திரன் சாடல்
Reviewed by NEWMANNAR
on
June 12, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 12, 2015
Rating:


No comments:
Post a Comment