அண்மைய செய்திகள்

recent
-

காதல் காலத்தில் ஐ.பி.எஸ்…கல்யாண கோலத்தில் ஐ.ஏ.எஸ்! கணவனின் வெற்றிக்குப் பின்னே மனைவி


 “நாங்க காதலிச்சப்ப… நான் ராஜலிங்கம் ஐ.பி.எஸ்… திருமணமான பிறகு ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ்! தேங்க்ஸ் டு நித்யா, மை வொய்ஃப்!”

பாசமும் பெருமையுமாகப் பேசுகிறார் ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ்!

இந்த முறை நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி, 27 வயது தமிழர் ராஜலிங்கம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முராதா பாத் இல்லத்தில் மனைவியோடு இருந்தவருக்கு வாழ்த்துக்களைச் சேர்ப்பித்தோம்!

“பொதுவா ஐ.பி.எஸ். அதிகாரியா இருக்கறவங்க பணியின்போது படிச்சு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதறது ரொம்ப கடினமான விஷயம். ஆனா, இன்னிக்கு இவர் அதைச் சாதிச்சிருக்கறதுல எங்க குடும்பத்துக்குப் பெருமையோ பெருமை!” என்று நித்யா கண்கள் மலர,

அதைச் சாதிக்கக் காரணமாக இருந்த தங்களின் காதல் கதையோடு சேர்த்து, கலெக்டர் ஆன கதையையும் சொல்லத் தொடங்கினார் ராஜலிங்கம்…

“நான் கடையநல்லூர்க்காரன். படிச்சது திருச்சியில இருக்கற மத்திய அரசின் ரீஜினல் இன்ஜினீயரிங் காலேஜ்லதான். கெமிக்கல் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சதும் ஒரு தனியார் கம்பெனியில வேலையில இருந்த எனக்கு, அதுல மனம் ஒட்டல. ‘சமுதாயத்துக்கு என் பங்களிப்பு ஏதாவது இருக்கணும்’ங்கற நெனைப்பு மனசுக்குள்ள ஓடிட்டே இருக்க, அது வரை ஐ.ஏ.எஸ். கனவுகள் எதுவும் இல் லாம இருந்த நான், அதை எழுத முடிவு செஞ்சு என் வேலையை விட்டேன். இப்போ என் மனைவியாகிட்ட நித்யா… அப்போ எனக்கு ஒரு வருஷம் ஜூனியரான கல்லூரித் தோழி. ‘நீங்க கண்டிப்பா ஐ.ஏ.எஸ். ஆயிடுவீங்க..!’னு என்னோட ஒவ்வொரு பரீட்சைக்கும் எனக்கு மிகப் பெரிய மாரல் சப்போர்ட்டா இருந்தாங்க. அப்போல்லாம் ரெண்டு பேர் மனசுலயும் ஒரு அழகான… பவித்ரமான நட்பு இருந்துச்சு!” என்றவரைத் தொடர்ந்தார் நித்யா.

“அவரோட நாலு வருஷ முயற்சிக்கு, இப்போதான் பலன் கிடைச்சிருக்கு. முதல் வருஷ முயற்சியிலேயே மெயின் எக்ஸாம் வரை போனவர், இடையில மத்திய உளவுத்துறையில சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கானத் தேர்வையும் எழுதினார். அதுக்கான இன்டர்வியூவுக்கு கூப்பிட்டிருந்தாங்க. அதுக்காக டெல்லிக்குப் போயிருந்த சமயத்துல… ‘ஐ.ஏ.எஸ் இன்டர்வியூக்கான லெட்டர் வந்திருக்கு’னு வீட்டுல இருந்து போன். சப்-இன்ஸ்பெக்டர் இன்டர்வியூவை அப்படியே விட்டுட்டு, ஐ.ஏ.எஸ். இன்டர்வியூக்கு பதறி அடிச்சு ஓடினார். ஆனாலும் அதுல பாஸாக முடியாமப் போக, பொருளாதார ரீதியாவும் அப்போ அவருக்கு நெருக்கடி இருந்ததால, ‘சப் இன்ஸ்பெக்டர் வேலையும் போச்சே’னு ரொம்ப வருந்தினார்…”

– நித்யாவின் குரல் இறங்க,

“அப்போவெல்லாம் எனக்கு நித்யா தந்த ஆறுதலும் தன்னம்பிக்கையும் ரொம்பவே பெருசு. அந்த உத்வேகத்தோட மறுபடியும் ஐ.ஏ.எஸ். முயற்சிகளை எடுக்க, மறுபடியும் டெல்லியிலயிருந்து மத்திய உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. அது உறுதியான வாய்ப்பா இருந்தும், ‘இதைவிட பெரிய அங்கீகாரம் உங்களுக்கு காத்திருக்கு… கண்டிப்பா நீங்க ஐ.ஏ.எஸ். ஆவீங்க…’னு நித்யா பூஸ்ட்-அப் பண்ணிட்டே இருக்க, சப்-இன்ஸ்பெக்டர் வாய்ப்பை தைரியமா நிராகரிச்சுட்டு, ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதினேன். அந்த வருஷம் ஐ.பி.எஸ். ரேங்க் கிடைச்சது. உத்தரபிரதேச மாநில கேடரில் அலிகார்ல ஏ.எஸ்.பி-யா டிரெய்னிங்ல இருந்தேன். ஆனாலும், நித்யா என்னை ‘மறுபடியும் ஐ.ஏ.எஸ். எழுதுங்க…’னு துரத்திட்டே இருக்க, அடுத்த வருஷமும் ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுத, மறுபடியும் அதே ஐ.பி.எஸ். ரேங்க்தான் கிடைச்சது.

அதுக்குள்ள பயிற்சி முடிஞ்சு எனக்கு முராதாபாத்ல ஏ.எஸ்.பி-யா போஸ்ட்டிங் போட்டுட்டாங்க. முன்னைவிட பணிச்சுமைகள் அதிகமானதால, நான் வேலையில பிஸி ஆயிட்டேன். இந்த கால இடைவெளிக்குள்ள எனக்கும் நித்யாவுக்கும் இடையில இருந்த நட்பு, காதலா வளர்ந்திருக்க… குடும்பத்துல உள்ளவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு நித்யா போட்ட கண்டிஷன்… ‘கல்யாணத்துக்கு அப்பறம் மறுபடியும் ஐ.ஏ.எஸ். எழுதணும்!ங்கறதுதான்’. ‘என் நம்பிக்கை எல்லாம் காலி ஆயிருச்சு. இந்த அட்டம்ப்ட் உன் நம்பிக்கைக்காக…’னு சொல்லி, கல்யாணம் முடிஞ்ச கையோடயே பரீட்சைக்கு கிளம்பினேன். நித்யாவோட நம்பிக்கையும், என் குடும்பத்தாரோட பிரார்த்தனையும் கூட்டு சேர்ந்து, இந்த முறை ஐ.ஏ.எஸ். ரேங்க் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” என்ற ராஜலிங்கம் நிறைவாக…

“இந்த வெற்றியை நான் சமர்ப்பணம் பண்றது என் பெற்றோருக்கு! எங்கம்மா மலையம்மாள், ஒரு இல்லத்தரசி. கடையநல்லூர் முனிசிபாலிட்டியில ஒரு சாதாரண பில் கலெக்டரா இருந்த எங்கப்பா சுப்பையா, உயர் அதிகாரிகளோட அறைக்கு செருப்பைக் கழட்டிட்டுத்தான் போகணும்கற அந்த நடைமுறையை ரொம்ப அவமானமா நெனச்சு, எப்படியாச்சும் படிச்சு வேற நல்ல பதவிக்கு போகணும்னு உழைச்சார். கஷ்டப்பட்டு பி.ஏ. பாஸ் பண்ணி, வங்கித் தேர்வு எழுதி, இந்தியன் பேங்க்ல வேலைக்கும் சேர்ந்தார். அவர் என்னை எப்பவுமே படிகணும்னு கண்டிச்சதில்ல. நான் சின்ன வயசுல மார்க் குறைய வாங்கினப்போகூட, ‘நமக்குப் படிப்பைத் தவிர எந்தச் சொத்தும் இல்லப்பா. உன்னுடைய வாழ்க்கையை நீதான் தீர்மானிக்கணும்’னு மட்டும்தான் சொல்லுவார். இன்னிக்கு அவங்க பையன் ஐ.ஏ.எஸ்! என் வெற்றியில எனக்கு இருக்கற பெரிய சந்தோஷம் இதுதான்!” என்று உணர்ச்சிவசப்படும் தன் கணவரின் வார்த்தைகளை மகிழ்ந்து நித்யா ரசிக்க…

“இந்த வெற்றியை நான் அடையறதுக்கு காரணமா… என் பின்னால இருந்து தாங்கிப் பிடிச்சுக்கிட்ட நித்யா… எனக்குக் கிடைச்சது என் பாக்கியம்தான்” என்று நெகிழ்ந்தார் ராஜலிங்கம்!
காதல் காலத்தில் ஐ.பி.எஸ்…கல்யாண கோலத்தில் ஐ.ஏ.எஸ்! கணவனின் வெற்றிக்குப் பின்னே மனைவி Reviewed by NEWMANNAR on July 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.