வேட்பாளருக்கான ஒழுக்கக்கோவை வர்த்தமானியில் வெளியிடப்படும்
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கட்சி பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சட்டதிட்டங்கள் அமுலாக்கம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவையினை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்குமென்று இந்த சந்திப்பின்போது கட்சி பிரதானிகளிடம் தேர்தல்கள் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் கட்சிப் பிரதானிகளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சந்தித்திருந்த நிலையில் இரண்டாவது தடவையாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றது.
நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதான கட்சிகள் அனைத்தினதும் பிரதானிகளும் ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் செயற்படுதல், தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடுகளின் போதும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக இந்தக் கலந்துரையாடலின் போது தேர்தல் பிரசாரம் தொடர்பிலேயே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஒரு கட்சியின் சார்பில் 25 பேர் அளவில் வீடுகளுக்கு சென்று தமது கட்சி பிரசாரங்களை மேற்கொள்ள முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு வேட்பாளரும் தமது கட்சி காரியாலயம் தவிர்ந்து தாம் போட்டியிடும் மாவட்டத்தில் தனிப்பட்ட காரியாலயம் ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும்.
அத்தோடு அரசாங்க உடைமைகள் மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை உடனடியாக தடுக்கும் கோரிக்கையும் நேற்று விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரசாரக் கூட்டங்களின் போது தடைசெய்யப்பட வேண்டிய விடயங்கள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் பிரசார அலுவலகங்களை அமைத்தல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்கள் தொடர்பில் கட்சி பிரதானிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச் சந்திப்பினைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவையினை வர்த்த மானியில் பிரசுரிப்பதற்கும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கும் தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்குமென்றும் தெரியவருகிறது.
வேட்பாளருக்கான ஒழுக்கக்கோவை வர்த்தமானியில் வெளியிடப்படும்
Reviewed by NEWMANNAR
on
July 21, 2015
Rating:

No comments:
Post a Comment