பேருந்துகளில் வேட்பாளர்களின் போஸ்டர்கள் ; சாரதி , நடத்துநர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் வூட்லர்
தேர்தல் வேட்பாளர்களது போஸ்டர்களை அரச பேருந்தில் ஒட்டுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானது எனவே எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதி, நடத்துநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார். இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லருக்கும் இடையில் யாழ்.பிரதான பேருந்து நிலையத்தில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே மேற்கண்ட அறிவித்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது, அரச சொத்துக்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாது என்பது தான் தேர்தல் சட்டம். ஆனால் தற்போது அரச சொத்துக்களை பயன்படுத்துவது குறித்தே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
அந்தவகையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அரச சொத்தான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் வேட்பாளர்களது போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இவ்வாறான பேருந்துகள் சேவையில் ஈடுபட கூடாது.அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரத்திலோ அல்லது இரவு வேளையிலேயோ ஒட்டப்பட்டால் அதனை காவலாளி கவனிக்க வேண்டும்.
அவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்தில் போஸ்டர்கள் இருப்பின் பேருந்துகளை நிலையத்திற்குள் வரவோ வெளியில் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் என்று அதனை அகற்றிய பின்னரே செல்ல அனுமதிக்க வேண்டும். நாங்கள் அறிவுறுத்தலை வழங்கி விட்டோம். இதனை மீறும் பட்சத்தில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பேருந்துகளில் வேட்பாளர்களின் போஸ்டர்கள் ; சாரதி , நடத்துநர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் வூட்லர்
Reviewed by NEWMANNAR
on
July 15, 2015
Rating:

No comments:
Post a Comment