இன்று எந்த ஆட்சி மாற்றத்தை நாம் எதிர்பார்த்தோமோ அதனை அடைந்து விட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளது.றிஸாட் பதியுதீன்.
மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி உள்ளிட்ட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை மீணடும் அவர்களது மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கு சதி செய்யும் கும்பல்களுடன் பிரதேசவாதம் பேசும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் தையல் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களின் தையல் பயிற்சி கண்காட்சி நேற்று(6) திங்கட்கிழமை முசலி பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது-
இன்று எந்த ஆட்சி மாற்றத்தை நாம் எதிர்பார்த்தோமோ அதனை அடைந்து விட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸவின் கடைசி ஒரு வருட ஆட்சியில் முஸ்லிம்கள் எதிர் கொண்ட சவால்களும்,இழப்புக்களுமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் ஆட்சிக்கு வழிகோழியது.
ஆனால் இன்று இரண்டு பேரும் அதே மாதிரியான நிலைக்குள் இருக்கின்றார்களா ?என்று மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மைத்திரிபால சிறிசேன அவர்களின் கட்சியில் போட்டியிட அனுமதியளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்க்கின்ற போது,மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பில் நாம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கின்றோம்.
நான் அரசியலுக்கு வந்தது வட புல முஸ்லிம்களின் வெளியேற்றம் அதனோடு அவர்களுக்கு இடப்பட்டிருந்த அகதி என்கின்ற விலங்கினை அகற்றுவதற்கு,ஆனால் சில அரசியல்வாதிகள் தொடர்ந்தும் இந்த மக்களை அடக்கி வைக்கப்பார்க்கின்றனர்.
இந்த வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க வேண்டுமென எவர்கள் செயற்படுகின்றார்களோ அவர்களின் அணியில் இன்னும் சிலர் இணைந்துள்ளதுடன்,இவர்கள் எமது மக்களை அவர்களுக்கு காட்டிக்கொடுக்கின்ற வேளையினை செய்துவருகின்றனர்.
இந்த மக்களது வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக செயற்படுகின்ற அநியாயத்தை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
அன்று விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முசலி பிரதேசத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் மின்சார வசதிகளின்றி இருந்த போது மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொடுத்து,அந்த திறப்பு விழாவுக்கு வந்தேன்,அது மட்டுமல்லாமல் இப்பிரதேசம் விடுவிக்கப்பட்டதன் பின்னரும்,இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து கொடுத்துள்ளேன்.பாதைகள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,மத வழிபாட்டு தளங்கள் என எத்தனை அபிவிருத்திகளை இன்று நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
ஏன் இவற்றையெல்லாம் நான் சுட்டிக்காட்டுகின்றேன் என்றால் இன்று சிலர் பிழையான பிரசாரங்களை செய்கின்றனர்.
தையல் பயிற்சிகளை எனது ஆதரவாளர்களுக்கு மட்டும் வழங்குவதாக,இங்கிருக்கின்ற நீங்கள் சாட்சியாக இருக்கின்றீர்கள்,இந்த பயிற்சிகளை யாருக்கு நான் வழங்கியுள்ளேன் என்று,இந்த பயிற்சிகளை எனது தேர்தலுக்காக நான் நடத்தவில்லை.பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வில் வழிகாட்டி,ஒளியூட்ட வேண்டும் என்ற நோக்கில் மட்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று எமக்கெதிராக கடுமையான விமர்சனங்களை சிங்கள ஊடகங்களும்,இனவாத அமைப்புக்களும் செய்துவருகின்றன.
இதன் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பது,வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட வேணடும் என்பதை காணமுடிகின்றது.
இதற்கு ஊதுகுழலாக அரசியல்வாதிகளும்,தனியார் ஊடங்களும் வரிந்து கொண்டு செயற்பட்டுவருகின்றதை இங்கு கூறியாக வேண்டும்.என்றும் கூறினார்.
இந்ந நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,உற்பட அமைச்சரின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்று எந்த ஆட்சி மாற்றத்தை நாம் எதிர்பார்த்தோமோ அதனை அடைந்து விட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளது.றிஸாட் பதியுதீன்.
Reviewed by NEWMANNAR
on
July 07, 2015
Rating:
No comments:
Post a Comment