ஒன்பது மாத காலத்துக்குள் பத்து சிறுவர்கள் படுகொலை : 795 பேர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...
நாடளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் 10 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 795 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 9 மாதங்களில் சிறுவர்கள் கடுமையாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த 84 சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 2014 ஆம் ஆண்டில் 27 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டனர். சிறுவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டும் 1680 சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர்.
இதேவேளை சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கான காரணங்களை ஆய்வு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
இந்த குழு முன்வைக்கவுள்ள பரிந்துரைகளை பகுப்பாய்வு செய்து அவற்றை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கூடுதலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
அதேநேரம், இவ்வாறான துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு சட்ட ரீதியாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவிருப்பதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை போக்குவரத்து அதிகார சபையில் பயிற்சி பெற்ற சாரதிகளை கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்க வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வாறு அதிகார சபையில் பயற்சி பெறும் சாரதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சான்றிதழை சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆலோசனை முன்வைத்துள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் தொடர்பில், இனி 24 மணித்தியாலமும் முறையிட முடியும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் அறிவித்துள்ளது.
குறித்த சேவை கடந்த காலத்திலும் காணப்பட்டாலும், காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது அதிகரித்துச் செல்லும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்களைக் கருத்திற்கொண்டு தற்போது இச்சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
ஒன்பது மாத காலத்துக்குள் பத்து சிறுவர்கள் படுகொலை : 795 பேர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...
Reviewed by Author
on
September 21, 2015
Rating:
Reviewed by Author
on
September 21, 2015
Rating:


No comments:
Post a Comment