சேயா படுகொலை: 17 வயது சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாரின் அணுகுமுறைக்கு எதிராக முறைப்பாடு
சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் தொடர்பில் பொலிஸார் பின்பற்றிய அணுகுமுறைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
மாணவன் தொடர்பில் பொலிஸார் தகவல்களை வெளியிட்ட விதத்திற்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் உள்ள 17 வயது பாடசாலை மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவருகின்ற மாணவன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், ஆபாசப் படம் பார்ப்பதாகவும், அவரது மடிகணனியில் இருந்தவை பற்றியும் பொலிஸார் வெளியிட்ட தகவல்களை வன்மையாக கண்டிப்பதாகவும் சங்கத்திப் பிரதம செயலாளர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களிலும் பொலிஸார் இத்தகைய தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யும்போது பொலிஸார் மிகவும் கவனமாக அவர் தொடர்பிலான விடயங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
சேயா படுகொலை: 17 வயது சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாரின் அணுகுமுறைக்கு எதிராக முறைப்பாடு
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:


No comments:
Post a Comment