அரோஹரா... விண்ணைப் பிளக்க நல்லூரான் வீதி உலா...
நல்லை தேர்த் திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள்
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லைக் கந்தன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்த தேர் உற்சவத்தில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். காலை 7 மணிக்கு வெளி வீதிக்கு வந்த நல்லைக் கந்தன் 7.15 மணியளவில் தேரில் ஆரோகணித்தார். இலட்சக் கணக்கான பக்தர்களின் அரோஹரா ஒலிக்கு மத்தியில் தேர்த் திருவிழா ஆரம்பமானது.
கோவில் வளாகத்தில் நிறைந்திருந்த சன சமுத்திரத்துக்கு மத்தியில் நல்லைக் கந்தன் தேரேறி சென்ற காட்சி கண்கவர் காட்சியாக அமைந்திருந்தது. நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டு நல்லைக் கந்தனின் ஆசிவேண்டிப் பிரார்த்தித்திருந்தனர்.
தேர் வெளிவீதிவலம் வந்து காலை 10.00 மணிக்கு தேர் முட்டியை வந்தடைந்தது. அதன் பின்னர் பச்சைசாத்தி திருஊஞ்சல் பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேரிலிருந்து நல்லைக்கந்தன் ஆரோகணித்தார்.
நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு திருடர்களின் நடமாட்டத்தைக் கட் டுப்படுத்தும் நோக்கில் சிவில் உடையிலும், சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எதுவித பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெற்றிருக்க வில்லையென பொலிஸார் தெரிவித்தனர். ஓரிரு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றி ருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரி விக்கின்றன.
இம்முறை பெரும் எண்ணிக்கையான பறவைக் காவடிகள் எடுக்கப்பட்டிருந்தன. கடந்த காலங்களைப் போல் அல்லாது வடக்கு வீதியால் மாத்திரம் பறவைக் காவடிகள் கோவில் வளாகத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. அது மாத்திரமன்றி தூக்குக் காவடிகள் யாவும் குபேர வாசலில் இறக்கப்பட்டன.
அங்கப்பிரதஷ்டை, அடியளித்தல், தீச் சட்டி ஏந்தல் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்திருந்தனர். நல்லூர் வெளிவீதியின் பல இடங்களிலும் கோவிலுக்குள் நுழை யும் பிரதான இடங்களிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வெளிவீதியில் உள்ள மண்டபங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.
அரோஹரா... விண்ணைப் பிளக்க நல்லூரான் வீதி உலா...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment