இலங்கை சிறைச்சாலைகளில் வாழும் அரசியல் கைதிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
இலங்கை சிறைச்சாலைகளில் வாழும் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கொழும்பு, மகசின், அனுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் அகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் சிறையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்; தங்கள் விடுதலையை வேண்டி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
சுமார் 250 கைதிகளுக்கு மேல் சாவா? வாழ்வா? என்னும் போராட்டத்தில் இறங்கவுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்தது எனவும், நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் காலம் எனக் கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமானது செய்ய வேண்டிய நல்லிணக்க வேலைகளில் ஒன்றான அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக இருந்த காரணத்தினாலேயே கைதிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு,அரசாங்கத்தினாலேயே தள்ளப்பட்டுள்ளார்கள.;
பல தடைவைகள் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும், மற்றும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், அரசியல் கைதிகள் சார்பாக பல மனித உரிமை அமைப்புக்களும், மற்றும் சமய குருமார்களும் விடுதலை செய்யக்கோரி கடிதங்கள் அனுப்பி இருந்தார்கள்.
அதே போன்று அரசியல்வாதிகளான எதிர்கட்சி தலைவர் சம்மந்தர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், மனோகணேசன், முதலமைச்சர் விக்கேஸ்வரன் மற்றும் பலர் நேரடியாக சந்தித்தும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கூறியிருந்தார்கள்.
அத்தோடு; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களும் மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியாக வந்தவுடன் நேரில் சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டபோது ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் 6 மாத காலத்திற்குள் அனைவரையும் விடுதலை செய்வதாக் ஆனால் மதகுருவிற்கு கொடுத்த வாக்கு கூட இதுவரை நிறைவேறவில்லை.
அதேபோன்று சிறையில் வாழும் அரசியல் கைதிகள் தங்களின் கையைழுத்திட்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கூடாக ஐனாதிபதியிடம் விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தனர். அதே போன்று 01.10.2015 தினத்தன்று சிறுவர் தினத்தை சந்தோசமாக கொண்டாட முடியாத அரசியல் கைதிகளின் பிள்ளைகள் ஊர்வலமாகச் சென்று வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடாக ஐனாதிபதிக்கு தங்களின் தந்தையர்களை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.
இப்படியான பல முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை. அப்படியிருந்தும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த அந்த காலப்பகுதியில் 14,000 போராளிகளுக்கு விடுதலைக்கு வழிவகுத்து கொடுத்தது போன்று இப்போது சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தும். அதே போன்றுதான் அமெரிக்காவின் மிசன் விசாவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்கள் ஆனால் இப்படியான கருத்துக்களுக்கு கூட மதிப்பளிக்காமல் நல்லாட்சி நடப்பதாக தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் கருத்துக்கள் ஏற்றதாக தெரியவில்லை.
மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களாகவே இருக்கின்றார்கள். அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையே ஏமாற்றும் ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.என அரசியல் கைதிகளின் உறவினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் விடையம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரும்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவருமான அந்தோனி சகாயம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
குறித்த சிறைச்சாலைகளில் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 250 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தமது விடுதலை குறித்து எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.என தெரிவித்தார்.
இலங்கை சிறைச்சாலைகளில் வாழும் அரசியல் கைதிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
Reviewed by NEWMANNAR
on
October 10, 2015
Rating:

No comments:
Post a Comment