வெள்ளை மாளிகையை தீ வைத்து அழிக்கப் போவதாக ஐ.எஸ். அச்சுறுத்தல் : இத்தாலிய தலைநகரிலும் தாக்குதல் நடத்த திட்டம்...
அமெரிக்க வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வியாழக்கிழமை தம்மால் வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளி காட்சியொன்றில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் தொடர்ச்சியாக அமெரிக்க நியூயோர்க் நகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தவுள்ளதாக அச்சுறுத்தல் விடுத்து மேற்படி தீவிரவாதிகளால் காணொளிக் காட்சியொன்று வெளியி டப்பட்டமைக்கு ஒரு நாள் கழித்து மேற்படி புதிய காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தக் காணொளிக் காட்சியில் தீவிரவாதிகள் வழமையாக அணியும் ஆடைகளையொத்த ஆடையை அணிந்து நீண்ட தாடியுடன் தோன்றிய ஜிஹாதி, “நாம் பாரிஸில் எமது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளோம். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவற்றை நாங்கள் பூர்த்தி செய்யவுள்ளோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இறைவனின் விருப்பத்தின் பிரகாரம் நாங்கள் வெள்ளை மாளிகையை எமது தீயால் கறுப்பாக்குவோம்" என அவர் அந்தக் காணொளிக் காட்சி யில் சூளுரைத்துள்ளார்.
மேற்படி காணொளிக் காட்சி ஈராக்கியத் தலைநகர் பக்தாத்தின் வடக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள திஜ்லாஹ் மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஆராய்ச்சி நிறுவகம் தெரிவிக்கிறது.
இந்தக் காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மரணதண்டனை நிறைவேற்றங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அல் காயத் ஊடக நிலையத்தின் கறுப்புக் கொடிச் சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தக் காணொளிக் காட்சியில் வீதியொன்றில் நின்றவாறு உரையாற்றும் பிறிதொரு தீவிரவாதி, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அந்தத் தீவிரவாதி கடவுளைக் குறிக்கும் வகையில் வானை நோக்கி கையைக் காண்பித்து, இந்தத் தாக்குதல்கள் மூலம் எதனை அவர்கள் (ஐ.எஸ். தீவிரவாதிகளின் எதிரிகள்) எம்மிடமிருந்து எதிர்பார்க்க முடியும்? “ என வினவினார்.
"நாம் மேலும் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் அவரது மக்களுக்கும் போலவே பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட்டுக்கும் அவரது மக்களுக்கும் செய்தியொன்றைக் முன்வைக்கிறோம்' என்று தெரிவித்த அந்த தீவிரவாதி, "நாம் (வெடிபொருட்களைக் கொண்ட) பட்டிகள் மற்றும் கார் குண்டுகள் என்பவற்றின் மூலம் அவர்களை வாட்டவுள்ளோம்" என்று கூறினார்.
“ அவர்கள் எங்கு சென்றாலும் நாம் அவர்களைத் தொடர்வோம். நாம் அவர்களை அடிமைகள் போன்றும் நாய்கள் போன்றும் மாற்றுவோம்' என அந்தத் தீவிரவாதி மேலும் தெரிவித்தார்.
மேலும் அந்தக் காணொளிக் காட்சி 'ரோமுக்கு முன் பாரிஸ்' என குறிப்பிடும் வாசகத்தைக் கொண்ட காட்சியையும் உள்ளடக்கியிருந்தது. இது இத்தாலிய தலைநகரான ரோமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையை தீ வைத்து அழிக்கப் போவதாக ஐ.எஸ். அச்சுறுத்தல் : இத்தாலிய தலைநகரிலும் தாக்குதல் நடத்த திட்டம்...
Reviewed by Author
on
November 22, 2015
Rating:

No comments:
Post a Comment