அகிம்சைப் போராட்டத்துக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்!
தமிழ் மக்களுக்கு விரோதமாக கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் செய்யும் செயலுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் தங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவதும் கட்டாயமானதாகும்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு எங்கும் நேற்றையதினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர் பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இந்த அகிம்சைப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அகிம்சைப் போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டியவை. ஏனெனில் அவை ஜனநாயகத்தில் வலிமையானவை.
எனவே வலிமையான ஜனநாயகப் போராட்டங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் ஜனநாயகம் உறுதிப்படும். ஆகையால் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கு கிழக்கில் நடந்த அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
அகிம்சைப் போராட்டங்களை உதாசீனம் செய்வதானது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உணரப்பட வேண்டும். இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என் பது அகிம்சை வழியிலேயே மிக நீண்டகாலம் இடம் பெற்றது.
எனினும் சிங்கள ஆட்சியர்கள் அகிம்சைப் போராட்டத்தை நசுக்கியதுடன் அந்தப் போராட்டத்திற்கு உரிய தீர்வுகளையும் வழங்கத் தவறினர்.
அதன் விளைவாக இந்த நாடு மிகப்பெரிய யுத்த அழிவுகளை சந்தித்தது. இப்போது மீண்டும் தமிழ் மக்கள் அகிம்சை வழியில் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
எந்த விதமான வன்முறைகளுமின்றி, பூரண ஹர்த்தால் என்ற அகிம்சை வழிப் போராட்டத்தை நேற்றையதினம் வடக்குக் கிழக்கு மக்கள் நடத்தினர். இதற்கு நல்லாட்சி செய்பவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தாக வேண்டும்.
இது விடயத்தில் அரசு காட்டும் தாமதம் தமிழ் கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலரின் உடல்நிலை மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதான செய்திகள் சாதாரணமானவை அல்ல.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு துரதிர்ஷ்டமான சம்பவங்கள் ஏதும் நடக்குமாயின் அது சிங்கள-தமிழ் நல்லுறவை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அதுமட்டுமன்றி கட ந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமை தமிழ் மக்கள் செய்த பெரும் தவறு என்பதாகவே நிலைமை முடியும்.
எனவே தமிழ் அரசியல் கைதிகளை காலதாம தமின்றி உடனடியாக விடுதலை செய்வது அரசின் தார்மீகக் கடமை. இதற்கு அப்பால், கைதிகளின் விடுதலைக்காக அகிம்சை வழியில் நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் நடந்த ஹர்த்தால் வடக்கு கிழக்கு மக்களின் ஒற்றுமைப் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.
இதுபோல தமிழ் மக்களுக்கு விரோதமாக கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் செய்யும் செயலுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் தங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவதும் கட்டாயமானதாகும்.
இல்லையேல் தமிழ் மக்களை எப்படியும் ஏமாற் றலாம் என்று ஏமாற்றுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் நினைத்துவிடுவர்.
அகிம்சைப் போராட்டத்துக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்!
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:


No comments:
Post a Comment