வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 800 ஏக்கர் காணிகள் விடுவிப்பு?
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பலாலி மற்றும் காங்கேசன்துறையைச் சேர்ந்த 5 கிராம சேவையாளர் பிரிவுகள் - 800 ஏக்கர் நிலப்பரப்பு -நாளைய தினம் விடுவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
மஹிந்த அரசின் காலத்தில் வலி.வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் நிலப் பரப்பு, இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த பெப்ரவரி - மார்ச் மாதங்களில் ஆயிரத்து 73 ஏக்கர் நிலப் பரப்பு வரையில் விடுவிக்கப்பட்டது.
பலாலியில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி பண்டாரநாயக்காக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். அத்துடன் நேற்று நாடாளுமன்றத்திலும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.
விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் காங்கேசன்துறை தெற்கு மற்றும் தையிட்டி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் கடந்த சில தினங்களாகக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. அவை முற்றுப் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுடன் பலாலி வடக்கு - பலாலி கிழக்கு - பலாலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுகளும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் - முகாம்கள் பின்நகர்த்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணி விடுவிப்புக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 800 ஏக்கர் காணிகள் விடுவிப்பு?
Reviewed by Author
on
December 20, 2015
Rating:

No comments:
Post a Comment