கிளிநொச்சியில் 21இல் கூட்டமைப்பின் கூட்டம், 22இல் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களுடனான அவசர கலந்துரையாடல் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
இதற்கு மறுநாள் 22ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமும் அங்கு நடைபெறவுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்குமான கூட்டத்தைக் கூட்டுமாறு பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணசபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தும் இருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இந்தக் கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதற்கு மறுநாள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கூடவுள்ளது.
21ஆம் திகதி நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் நிகழ்கால விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்துடன் புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்பட நிகழ்கால விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று மேலும் கூறினார்.
கிளிநொச்சியில் 21இல் கூட்டமைப்பின் கூட்டம், 22இல் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்...
Reviewed by Author
on
January 12, 2016
Rating:
Reviewed by Author
on
January 12, 2016
Rating:


No comments:
Post a Comment