அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் இன்றும் சுதந்திரக்காற்றை அனுபவிக்க முடியாமல் சிறைகளில் வாடுகின்றனர்



இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தமிழர்கள் இன்றும் சுதந்திரக்காற்றை அனுபவிக்க முடியாத நிலையில் சிறைகளில் வாடுகின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
கல்முனை சைவமகாசபையின் 47வது ஆண்டு நிறைவு விழாவும். அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சைவமகாசபையின் தலைவருர் கலாபூசணம் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் கல்முனை இராமகிருஸ்ண மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் சிறப்பு அதிதியாகவும், கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், வித்தியாலய அதிபர் திருமதி.விஜயசாந்தி நந்தபால, கௌரவ அதிதிகளாகவும், மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள். ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

“இன்று பல வருடக்கணக்கில் தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். அவர்களுக்கான எந்த ஒரு நல்ல தீர்வினையும் கொடுக்காத இந்த அரசு கூட 68ஆவது சுதந்திர தினத்திற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் செய்து வருகின்றது.

சுதந்திரதினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் அந்த நாளை கரிநாளாகவும், துக்க நாளாகவும் அனுஸ்டிக்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். விடுதலை புலிகள் இயக்கத்தில் அன்று போராட்டங்களை வழிநடத்திய தளபதிகளுக்கு முன்னைய அரசு சொகுசு வீடுகளையும், ஆடம்பர வாகனங்களையும் வழங்கி தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தினார்கள்.

ஆனால் அவர்களால் வழிநடத்தப்பட்டவர்களும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் இன்றும் தங்களது உறவுகள், குழந்தைகளை பிரிந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் அவர்களை விடுதலை செய்வதற்கான எந்த நல்ல தீர்க்கமான நடவடிக்கைகளையும் தற்போதைய நல்லாட்சிக்கான அரசும் செய்து கொடுக்கவில்லை என்பது மனவேதனை தரும் விடயமாகும்.



எமது சமூகம் இன்று பல வழிகளில் தங்களுடைய கலை, கலாசாரங்களை இழந்து வருகின்றது. அதற்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் காணப்படும் தொலைபேசி பாவனையும், தகவல் தொழிநுட்பங்களும் அவர்களை தீய வழிக்கு இட்டுச்செல்கின்றது.

எமது ஆலயங்களில் உள்ள இந்து மதப்பெரியார்கள் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை கையாளவேண்டும். வெறுமனே ஆலயங்களில் பூசை வழிபாடுகளில் மாத்திரம் நின்று விடாமல் எமது சைவ மரபுகளை இளம் சந்ததியினருக்கு எடுத்துக்கூறவேண்டிய பாரிய பொறுப்பு அவர்களிடம் காணப்படுகின்றது.

இந்த நாட்டிலே யுத்தம், சுனாமி போன்ற பாரிய அழிவுகள் ஏற்பட்டபோது இந்து அமைப்புகள் எதுவும் முன்னின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முன்வரவில்லை. இன்று கிகழ்ககு மாகாணத்தினை பொறுத்தவரையில் எத்தனையோ இந்து ஆலயங்கள் நிதிநிலமைகளை கையாளக்கூடி விதத்தில் காணப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்கின்றதா என்றால் அது கேள்விக்குறியான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

எம்மிடமிருந்த பல பாடல் பெற்ற தலங்கள் எமது கைகளில் இருந்து கைநளுவிப்போயிருக்கின்றது. அதற்குக் காரணம் அரசியல் அல்ல எமது மதத்தில் இருந்த தவறான கட்டுப்பாடுகளே காரணமாக இருக்கின்றது.

இன்று ஆலயங்களை எடுத்துக்கொண்டால் இசைநிகழ்ச்சிகள் நடத்துவதனை உடனடியாக நிறுத்தி எமது பாரம்பரியங்களான கலைகலாசாரங்களை எமது இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடத்தவேண்டும்.

அதற்கு இந்த சைவமகாசபை போன்று இந்து அறநெறி பாடசாலைகள் முன்னின்று உழைக்கவேண்டும்”

என்று கூறியதோடு இங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இருந்ததாகவும் அதனை ஒழுங்கு படுத்திய ஆசிரியர்களுக்கும் சைவமகாசபைக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 



தமிழர்கள் இன்றும் சுதந்திரக்காற்றை அனுபவிக்க முடியாமல் சிறைகளில் வாடுகின்றனர் Reviewed by Author on February 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.