மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது-செல்வம்,வினோ
பாலியல் வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து உச்ச பட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க வவுனியா பொலிஸார் உடன் தீவிர நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளர்.
-இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் இணைந்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு இக்கொலைக் குற்றவாளிக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது.
இளம் பெண்களோ,பாடசாலை மாணவியோ வீட்டில் தனியாக இருக்க முடியாத ஆபத்தான சூழல் என்றால் நாடு பயங்கரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருப்பதை உணர்த்துகின்றது. குற்றவாளிகள் கைது செய்யப்படாமலிருப்பதும், கைது செய்யப்பட்டவர்கள் உரிய தண்டனை பெறாமல் தப்புவதுமே இந்நிலைமைக்கு காரணமாகும்.
எனவே வவுனியா பொலிசார் விசாரணைகளை உரிய முறையில் மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனகேட்டுக் கொள்கின்றோம்.
இதே வேளை கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா மீது நடாத்தப்பட்ட தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். தனிப்பட்ட குரோதம் காரணமாகவோ அல்லது தூண்டுதல் காரணமாகவோ இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது அரசியல் காரணங்களால் கூட பழி வாங்கப்பட்டிருக்கலாம்.
எதுவாகவிருப்பினும் மாவட்டத்தின் உயர் நிலை அரசியல்வாதி ஒருவர் தாக்கப்பட்ட விடயத்திலும் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாப்பதும் பொலிஸாரின் கடமையாகும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது-செல்வம்,வினோ
Reviewed by NEWMANNAR
on
February 19, 2016
Rating:

No comments:
Post a Comment