தமிழக மீனவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்த வலியுறுத்தி யாழ் இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-என்.எம்.ஆலம்.
தமிழக மீனவர்கள் தங்கள் நியாயமற்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர் வரும் 29ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதுவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த உள்ள அதே சமயம் வடபகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தல் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் முன்பாக தமிழக மீனவர்களின் அத்து மீறிய வருகையை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணைய தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணைய தலைவர் என்.எம்.ஆலம் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அண்மைய வருகையின் போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட, கடற்தொழில் அமைச்சர் அவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று எதிர்வரும் 29ம் திகதி கடற்தொழில் அமைச்சர் டில்லி செல்ல உள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் சுமூகமாக தொழில் செய்வதற்கு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தேசிய மீனவ பேரவைத் தலைவர் மா. இலங்கோ இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் ஏனைய முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திப்பதற்கு தமிழகத்திலிருந்து டில்லி செல்கின்றார்.
கடற்தொழில் அமைச்சரின் விஜயத்திற்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 27 பேரும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக நம்பகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சரின் இந்திய விஜயத்தின் நோக்கம் இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை.
அத்து மீறி வரும் தமிழக மீனவர் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன? வட பகுதி மீனவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் கூறப்போகும் செய்தி என்ன? மீளவும் மீனவர் பேச்சு வார்த்தை என்ற பதத்தை பாவித்து இழுத்தடிக்கப் போகின்றனறா?
அல்லது இந்திய மீனவ தலைவர்கள் கோறுவது போல் 80 நாட்கள் எமது கடற்பரப்பில் தொழில் புரிய இடம் வழங்கப் போகின்றனறா? அல்லது எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் நடவடிக்கையை உடன்நிறுத்துமாறு கோரப் போகின்றனறா? என்பது மூடுமந்திரமாக உள்ளது.
முன்பிருந்த அமைச்சர்களை விட தற்போதைய கடற்தொழில் அமைச்சர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இழுவை மடிகளை பயன்படுத்துவதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.
அவரின் வடமாகாண வருகையின் போது அவரினால்; நேரடியாகவே அவதானிக்கப்பட்டது. இருந்தும் தமிழக மீனவர்கள் தங்கள் நியாயமற்ற கோரிக்கையை வலியுறுத்தி 29ம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதுவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த உள்ளனர்.
இச்செயற்பாடுகளினால் எமது அமைச்சர் தன் நிலையிலிருந்து தழர்ந்து விடாதிருக்கவும் தமிழக மீனவர்களுக்கு வடபகுதி மீனவ நிலையை அழுத்தமாக தெரிவிக்கும் முகமாக அமைச்சரின் இந்திய விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களாகிய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் முன்பாக தமிழக மீனவர்களின் அத்து மீறிய வருகையை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையம் தீர்மாணித்துள்ளது.என வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணைய தலைவர் என். எம். ஆலம் மேலும் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்த வலியுறுத்தி யாழ் இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-என்.எம்.ஆலம்.
Reviewed by NEWMANNAR
on
February 25, 2016
Rating:
No comments:
Post a Comment