முருங்கன் முச்சக்கர வண்டி பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு-வடக்கு அமைச்சர்.பா.டெனிஸ்வரன்-Photos
கடந்த சில நாட்களாக முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தினருக்கும் முசலி பிரதேச முச்சக்கர வண்டி சங்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டு வந்த முறுகல் நிலைக்கு சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெற்ற விசேட ஒன்று கூடலின் இடம் பெற்றது. இதன் போதே குறித்த இரு சங்கத்திற்கும் இடையில் சுமூகமான முறையில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தினருக்கும் முசலி பிரதேச முச்சக்கர வண்டி சங்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டு வந்த முறுகல் நிலை முற்றிய காரணத்தினால் கடந்த வாரம் குறித்த பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த இரண்டு சங்கத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் விசேட சந்திப்பு இடம் பெற்றது. குறித்த சநடதிப்பில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் , நானாட்டான் பிரதேச செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகியவற்றின் செயலாளர்கள், முருங்கன் மற்றும் சிலாவத்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டி சங்கங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் இணைந்து குறித்த முறுகல் நிலைக்கு சரியான தீர்வுகாணும் நோக்கில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது இரண்டு தரப்பினரும் தமது ஆதங்கங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வேளையிலே அங்கு தமது கருத்தைத் தெரிவித்த அமைச்சர் டெனிஸ்வரன், இனங்களுக்குள் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இல்லை என்றால் நாம் நிலையான ஓர் அபிவிருத்தியைக் காண முடியாது.
இரண்டு தரப்பினரிலும் உள்ள ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகளின் அடாவடித்தனத்தாலும் தான் தோன்றித்தனமான செயலாலுமே இந்த முறுகல் நிலை தோன்றியிருந்தது.
எனவே சம்மந்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டி சங்கத்தினரும் இவ்வாறு ஒரு சிலரது நடவடிக்கைகள் பிழையாக இருப்பின் சங்கம் சார்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு கட்டுப்படாத நிலையில் சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
இரண்டு பிரதேச செயலாளர்களுக்கும் சில நடை முறைகள் குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் சம்மந்தப்பட்ட இரண்டு பகுதியினருக்கும் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பிடம் வழங்கப்படவேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பிடம் வழங்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் வேறு தரிப்பிடம் வழங்கக் கூடாது.
அத்தோடு ஓர் தரிப்பிடத்தில் இருந்து இன்னோர் தரிப்பிடத்துக்கு அருகிலே பயணிகளை இறக்குபவர்கள் அந்த தரிப்பிடத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றக்கூடாது.
செல்லும் வழிகளில் பயணிகள் உங்களை நிறுத்தி ஏறிக்கொண்டால் ஏற்றிச் செல்லலாம் என்றும், அதே வேளை இரண்டு தரப்பினரும் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு மீறுபவர்களுக்கு எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க நினைப்பவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை நீதிமன்றின் ஊடாக வழங்கப்படும்.
எமது மக்கள் இன பேதத்தை மறந்து ஒற்றுமைப்பட்டு சில பிரச்சினைகள் வரும் போது சரியாக இனங்கண்டு அதனை ஆரம்பத்திலேயே தீர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இங்கு வாழ வேண்டும் ஒவ்வொருவருக்கும் பசி பட்டினி என்பது ஒன்று தான்.
எனவே இதனை உணர்ந்தவர்களாக செயற்ப்பட்டால் நாமும் வாழ முடியும் மற்றவர்களும் வாழ முடியும்.
எனவே எப்போதும் சட்டத்தை உங்கள் கையில் எடுக்காது சட்டதிட்டங்களை மதித்து நடந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முருங்கன் முச்சக்கர வண்டி பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு-வடக்கு அமைச்சர்.பா.டெனிஸ்வரன்-Photos
Reviewed by NEWMANNAR
on
February 19, 2016
Rating:

No comments:
Post a Comment