யாழில் அமைக்கப்பட்ட மாதிரி வீடுகள் குறித்த அறிக்கை வடக்கு முதல்வரிடம் சமர்ப்பிப்பு....
இடப்பெயர்வுகளை சந்தித்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்களில், முதற்கட்டமாக யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மாதிரி வீடுகளையும் வடமாகாண சபையின் பொறியியலாளர்கள் குழு ஆய்வுகளை மேற்கொண்டு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மீள்குடியேற்ற அமைச்சினால் இடப்பெயர்வுகளை சந்தித்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இந்த வீடுகள் தலா 21 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகளாக உள்ளபோதும், அவை பொருத்தும் வீடுகள் என்பதுடன் குறித்த 21 லட்சம் ரூபாய் பணத்திற்கு எமது பகுதியில் 3 வீடுகளை அமைக்கலாம் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கோப்பாய், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலக எல்லைகளுக்குள் தலா 1 மாதிரி வீடுகள் அமைக்கப்படும் எனவும் அவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு அனுமதித்ததன் பின்னர் அந்த வீட்டுத்திட்டத்தை தொடர்ந்து செய்யுமாறு பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இடையிலான சந்திப்பில் பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோப்பாய் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் பார்வையிட்டிருந்தார்.
இதனையடுத்து வடமாகாண சபையின் பொறியியலாளர்கள் குழு ஒன்று மேற்படி வீட்டை பார்வையிட்டு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறித்த வீட்டுத்திட்டம் எமக்கு பொருத்தமானதா?
அதன் நீண்டகால பயன்கள் என்ன? போன்ற பல விடயங்கள் தொடர்பாக இந்த ஆய்வுகள் செய்யப்பட்டு முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவருகின்றது.
யாழில் அமைக்கப்பட்ட மாதிரி வீடுகள் குறித்த அறிக்கை வடக்கு முதல்வரிடம் சமர்ப்பிப்பு....
Reviewed by Author
on
March 06, 2016
Rating:

No comments:
Post a Comment