அண்மைய செய்திகள்

recent
-

வாக்குத் தவறியது மைத்திரியின் அரசு!


காணாமற்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விவகாரம் இரண்டிலுமே அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை. இவ்வாறான நிலையில் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும். சரியான விடயங்களைச் செய்வதற்கு அரசு தயக்கம் காட்டக்கூடாது. சரியானவற்றை செய்வதற்குத் தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்.

காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. நம்பிக்கையற்ற தன்மையிலேயே அது இருக்கின்றது. எனவே, இனியும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டிருக்க முடியாது.

இயல்புநிலை திருப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இது பெரும் சிக்கலாக இருக்கின்றது. ஆகவே, காணாமல்போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பலவந்தமான காணாமல் போதல்களுக்கான போதிய சாட்சியங்கள் இருக்கின்றன என்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் அரச அதிகாரியினால் கைது செய்யப்படலோ அல்லது சரணடைந்தாலோ அந்த நபரின் பாதுகாப்பு பொறுப்பு அரசுக்குரியது என்றும் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பது பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களதுஉறவினர்களுக்கு இருக்கின்றது. ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் மேற்படி பரிந்துரைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. இவற்றை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் எவை? அத்துடன், காணாமல்போனோர் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவுக்கும் 17 ஆயிரத்து 329 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவை பற்றி காத்திரமான நடவடடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

குற்றவாளிகளோ சுதந்திரமாக நடமாடுகின்றனர். கடந்த ஆட்சியின்போது என்ன நடந்தது என்பது இரகசியமில்லை. அனைவரும் அதை அறிவர். எனவே, புதிய அரசிலாவது மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் நியாயமானவை. கடந்த அரசு இவை பற்றி அக்கறை காட்டவில்லை.

எனவே, மக்களால் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசிடம் இருக்கும் திட்டம் என்ன? மக்களின் சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை செய்வதற்குரிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது. இதன்படி, உண்மை, நீதி, இழப்பீடு ஆகிய விடயங்களை நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. இவற்றை நிறைவேற்றுவதற்கு செய்யப்பட்டுள்ள விடங்கள் எவை? காணாமல்போனோர் தொடர்பில் காணாமல்போனோர் சான்றிதழ் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரணச்சான்றிதழில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இந்தச் சான்றிதல் ஊடாக நஷ்டஈடு மற்றும் காணாமல்போனோருக்கு உரித்துடைய ஏனைய விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

காணாமல்போனோர் தொடர்பில் தமது திட்டம் என்னவென்பதை அரசு அறிவிக்க வேண்டும். இது அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும். சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சமூக குற்றச்சாட்டுக் கொண்டவர்கள் கிடையாது. அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும், தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 90 சதவீதமானோர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாதவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் கைதிகளுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்? இவ்வாறான நிலையில் எப்படி நல்லிணக்கம் ஏற்படும்? பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

எனவே, அந்தச் சட்டத்தின்கீழ் எப்படி தடுத்து வைக்க முடியும்? எப்படி தண்டிக்க முடியும்? கடந்த ஆட்சியின்பொது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஏன் தயக்கம் காட்டவேண்டும்? சரியான விடயங்களை செய்வதற்கு அரசு தயக்கம் காட்டக்கூடாது. சரியானவற்றை செய்வதற்குதான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்றார்.
வாக்குத் தவறியது மைத்திரியின் அரசு! Reviewed by Author on March 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.