பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்ற 7ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!
இலங்கை அரசினால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கோரியும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட 7ம் ஆண்டு நினைவு தினத்தில் பெரும் திரளாக ஒன்று கூடிய உறவுகள் முள்ளிவாய்க்காலில் படு கொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கான அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
அத்துடன், இந் நிகழ்விற்கு சமுகமளித்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பொது மக்கள் நீதி வேண்டி போராடும் தமிழ் மக்களுக்கான தமது முழு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான James Berry MP, Wes Streeting MP, Paul Scully MP, Gareth Thomas MP, Bob Blackman MP மற்றும் Cllr Keith Prince AM- GLA Member for Redbridge and Havering அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Jeremy Corbyn MP, Gavin Barwell MP, Jackie Doyle Price MP, Virendra Sharma MP, Tom Brake MP, John Mann MP, Joan Ryan MP, Mike Gapes MP, Stephen Timms MP, Roger Evans, Charles Tannock MEP, Syed Kamall MEP மற்றும் லண்டன் மேயர் Sadiq Khan போன்றோர்கள் இந் நினைவு தினத்துக்கு படு கொலை செய்யப்பட்ட மக்களுக்கான தமது இரங்கல் செய்தியையும் தெரிவித்திருந்தனர்.
இதில் முக்கிய செய்தியாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவர் Jeremy Corbyn MP அவர்கள் கொல்லப்பட்ட மக்களுக்கான தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
அத்துடன், தொழில் கட்சி தமிழர்களுக்கான நீதிக்காக பாடுபடும் எனவும் ஐ. நா மனித உரிமை ஆணையகத்தினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கும் எனவும் தனது செய்தியில் தெரிவித்திருந்தார்
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கால் தினம் தமிழ் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் பொழுது கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முக்கிய நிகழ்வாகும்.
7ஆம் ஆண்டு முள்ளி வாய்க்கால் நினைவு தினம்!
Go to Gallery
மேலும் 13 புகைப்படங்களை பார்வையிட
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நீதியைக் கோருவதற்கும் தமிழர்களுக்கான உரிமையை அங்கீகரிப்பதற்கும் மற்றும் அமுல்படுத்துவதற்குமுரிய புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பமும் ஆகும் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இடம்பெறும் தொடர்ச்சியான நில அபகரிப்பு தொடர்பாகவும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கையில் கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மற்றும் இனப்படுகொலைக்கான சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான வழியை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையை சர்வதேச நாடுகள் கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும் இவ்வருடம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினமும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இலங்கையின் ஆட்சி மாற்றம் ஒருபோதும் தமிழர்களுக்கான நீதியையோ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையோ ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்தியிருந்தது.
இந் நிகழ்வில் ஒழுங்கமைக்கப்பட்ட பேரணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பொழுது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்களும், பெண்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை தொடர்பாகவும் விபரிக்கும் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றதுடன், தெரு நாடகங்கள் வேற்றின மக்களை மிகவும் பாதித்திருந்ததுடன் எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேச சமூகத்திற்கு தெளிவாகவும் தெரியப்படுத்தியிருந்தது.
மேலும் தொடர்ச்சியாக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, தமிழர்களின் பூர்வீக நிலங்களை மற்றும் அடையாளங்களை அழிக்கும் வகையில் புத்த விகாரைகள் அமைத்தல், மற்றும் இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்டோர் மற்றும் காணமல் போனோர் தொடர்பான தகவல்கள் சர்வதேச சமூகத்துக்கு தெரிவிக்கும் வகையில் பதாகைகளும் இந் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் பெரும் திரளாக தமிழர்கள் கலந்து கொண்டமை தமிழர்கள் ஒருபோதும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறந்து விடப்போவது இல்லை என்னும் செய்தியையும் எம் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் தமிழர்களின் போராட்டம் தொடரும் என்னும் செய்தியையும் சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்தியிருந்தது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்ற 7ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!
Reviewed by Author
on
May 19, 2016
Rating:

No comments:
Post a Comment