இலங்கை தமிழர் தீர்வு பெறவிரைந்து நடவடிக்கை எடுப்பேன் -சந்திப்போமென விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா உறுதி!!!
இலங்கைத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த வாழ்த்துக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில்,
“அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன்.
வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னை சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி.
இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது நல்வாழ்த்துகளுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர் தீர்வு பெறவிரைந்து நடவடிக்கை எடுப்பேன் -சந்திப்போமென விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா உறுதி!!!
Reviewed by Author
on
May 30, 2016
Rating:

No comments:
Post a Comment