புகைப்பதை விட்டு விடுவீர்கள்... 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால்
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. புகைத்தல் பாவனையை கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனமானது, வருடாந்தம் ஒரு தொனிப் பொருளை முன் வைத்து மக்களை விழிப்புணர்வூட்டுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறை தொனிப்பொருளாக உருவமற்ற சிகரட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது. (எந்த வித விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரட் பெட்டி), அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்டுரைகளும் புகைப்படங்களும், சுவரொட்டிகளும் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் கீழே பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அதிர்ச்சி தகவல்களை பார்வையிடும் போது ஒரு வேளை நீங்கள் புகைப்பிடிப்பதை இன்றே விட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கொடிய நோய்
இன்றைய நவீன உலகில் நாடு, மொழி, இன, மத பாகுபாடின்றி ஆண்கள், பெண்கள் என அனைவரையும் வாட்டி வதைக்கும் மிகப் பெரியதொரு கொடிய நோயாக புகையிலை பாவனை காணப்படுகின்றது.
8 விநாடிகளில் உலகில் ஒருவர்
புகையிலை பாவனையால் ஒவ்வொரு 8 விநாடிகளில் உலகில் ஒருவரின் உயிரை திறக்கின்றார் என்பது பலரும் அறியாத உண்மையாகும்.
தொற்று நோய் அல்லாத இதர நோய்களில் முதலிடத்தை வகிக்கிறது இந்த ‘புகையிலை’.
மனிதர்களுக்கு புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்க எளிதான வழியாக இந்த புகையிலை மாறியுள்ளது.
ஆனால், அதன் விபரீதங்களை தெரிந்து கொள்ளவோ, புகையிலையை ஏன் ஒழிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவோ நாம் தயாராக இல்லை.
“புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைக்க கடந்த 1987ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
5 நிமிடங்களை இழக்கிறான்
ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும் மனிதன் தன் வாழ்நாளில் 5 நிமிடங்களை இழக்கிறான்.
அதேபோல் ஒவ்வொரு 8 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார்.
ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலைகள் மற்றும் சிகரெட் பாவனையால் இறக்கின்றனர்.
2030 க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது.
சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், புற்றுநோயை உருவாக்கும் 60 ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன.
மேலும் மென்று சுவைக்கக்கூடிய புகையிலைகளும் ஆபத்தை உருவாக்குகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் ஆஸ்துமா, காசநோய் நுரையீரல் புற்றுநோய் உள்பட பல வியாதிகள் ஏற்படுகிறன.
அதேபோல் பெண்களுக்கு குழந்தை கருத்தரிப்பு குறையும். தானாகவே கருச்சிதைவுகள் ஏற்படலாம். கர்பப்பை வாய் புற்றுநோய்கள் ஏற்படும்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிப்பு
புகை பிடித்தவர் வெளியிடும் புகையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் சகல விதமான நோய்களும் இவர்களுக்கு ஏற்படும்.
புகையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நம் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை அழித்து விடுகிறது. அதனால் இரத்தம் ஒக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை இழந்துவிடுகிறது.
இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகைப்பதனால் நரம்பு மண்டலம் செயற்கையாக தூண்டப்படுகிறது.
இதன் விளைவாக அதன் இயற்கையான தூண்டல் சக்தியை இழக்கிறது. எனவே புகை பிடிக்காத நேரத்தில் மிக மந்தமாக உணருவோம். விழிப்புணர்வு, ஞாபக சக்தி குறைந்து விடும்.
எனவே புகையிலையை நாடி செல்வது மேலும் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கபட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்படலாம். புகைப்பது நம் நரம்பு சம்பந்தமான செயல் என்பதால் அது சுரப்பிகளை பாதிக்கிறது.
ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம்
இதன் மூலம், ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம். புகைப் பழக்கத்தை கைவிட்டால் சுகமாக இருப்பதையும், உணவு சுவையாக இருப்பதையும் உணர முடியும்.
புகைப்பழக்கத்தை கைவிட்டபிறகு உடலில் இருந்து நிகோட்டின், கார்பன் மொனாக்சைடு போன்றவை வெளியேறும்.
இதைதொடர்ந்து உடலின் செயல்பாடுகள் எளிதாகும். மேலும் நுரையீரல்களுக்குள் உள்ளே காற்று அதிக அளவில் செல்லும். நுரையீரல்கள் அதிக திறனுடன் வேலை செய்யும். உள்ளிருக்கும் சளியை வெளியே உந்தித் தள்ள முடியும்.
உடலின் கை, கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். தொடர் புகைப்பழக்கம் உள்ளவராக இருந்தால் கூட இருதய நோய்கள் தாக்கும் அபாயம் பாதியாக குறைந்துவிடும்.
நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாகக் குறைந்துவிடும்.
பல்வேறு இடங்களில் மறைமுகமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடத்துகொண்டேதான் இருக்கிறது. புகையிலையை பல்வேறு வகைகளில் பயன்படுத்தும் கொடிய பழக்கத்தில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கவும், அந்த பழக்கத்தை யாரும் புதிதாக கற்றுக்கொள்ளாதபடி அரசாங்கங்கள் இன்னும் தீவிர நடவடிக்கை எடுத்து மனித சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.
இதுவே இந்த தினத்தில் நம் சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாகும்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப் படுவதன் முக்கியத்துவம்
இலங்கையில் 2013ஆம் ஆண்டு கணிப்பின்படி டெங்கு நோயினால் மரணித்தோரின் தொகை 89, எயிட்ஸ் நோயினால் 29 பேர் மரணித்தனர், வீதி விபத்தினால் அதே ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரை மரணித்தோரின் தொகை 500 ஆகும். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிகரட் புகைப்பதனால் இலங்கையில் நாளொன்றிற்கு 60 பேர் மரணிக்கின்றனர். அதாவது சிகரட் புகைப்பதனால் வருடாந்தம் மரணிப்போரின் தொகை சராசரியாக 20000 பேர் ஆகும். சர்வதேச ரீதியாக வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைத்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும் இரண்டாம் நிலை புகைத்தலின் காரணமாக (புகைக்காதோர்) 6 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரட் புகைப்பவர்களில் இருவரில் ஒருவர் மரணிப்பதற்கு நேரடி காரணமாக புகைத்தல் அமைகின்றது. அதாவது இருவர் சிகரட் புகைத்தால் அதில் ஒருவர் மரணிப்பதற்குப் பிரதான காரணமாக சிகரட் பாவனை அமைகின்றது.
ஆசிய நாடுகளில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருகின்றமை சுகாதாரத்திற்குப் பெரும் சவாலாகும். தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கு பிரதானமாக 04 காரணிகள் இனங்காணப் பட்டுள்ளன, அதில் சிகரட் பாவனை முதற் காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அதாவது புற்று நோய், மாரடைப்பு, பாரிசவாதம், சுவாச நோய்கள், குருதி அழுத்தம் போன்ற அனைத்து விதமான தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கும் பிரதான காரணமாக அமைவது சிகரட் பாவனை ஆகும்.
இலங்கை போன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகமானோர் கஷ்டப்பட்டு உழைக்கும் தனது சம்பளத்தில் பெரும் பகுதியை சிகரட் புகைப்பதற்கு செலவழிக்கின்றனர். இதனால் தனி மனித பொருளாதார பிரச்சினை ஏற்படுவது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைகின்றது. சிகரட் கம்பனியின் 92வீத மான பங்குகள் பிரித்தானியாவுக்கு அமெரிக்காவுக்கு சொந்தமானது. சிகரட் புகைப்பதனால் ஒரு நாளைக்கு சிகரட் கம்பனி 29 கோடி ரூபா இலாபம் ஈட்டுகின்றது, அதில் 92வீதமான தொகை பிரித்தானியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றடைகின்ற அதே வேளை இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 222 பில்லியன் சுகாதாரத் துறைக்கு செலவழிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சிகரட் புகைப்பவருக்கு மட்டுமின்றி கர்ப்பிணித் தாய்மார்கள், பிள்ளைகள் என சிகரட் புகைக்காத பலரும் பெரிதளவில் இதனால் பாதிப்படைகின்றனர்.
நாடு என்கின்ற ரீதியில் சிகரட் பாவனையை குறைக்கும் நோக்கிலும்,மேற்குறிப்பிட்ட பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நோக்கிலும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப் படுகின்றது.
இலங்கையில் சிகரட் பாவனை
மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தினால் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 31வீதமானோர் சிகரட் புகைக்கின்றனர்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டில் 4 பில்லியன் சிகரட்டுக்கள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன.
கடந்த 10 வருடத்துடன் ஒப்பிடுகையில் 14வீதமான வீழ்ச்சி காணப்படுவதுடன், 25 வயதிற்கு மேற்பட்டவர்களின் சிகரட் பாவனை 35.5வீதமாக இருக்கும் அதே வேளை, 15 தொடக்கம் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் சிகரட் பாவனை 25.1வீதமாகவும் காணப்படுகிறது. அதாவது இளைஞர்களின் பாவனை குறைந்து வருவதானது மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு விடயமாகும்.
கம்பனிகளின் நேரடித் தந்திரோபாயங்கள்
இருவர் சிகரட் புகைத்தால் ஒருவர் மரணிக்க நேரடி காரணமாக அமைவது சிகரட் பாவனையாகும். ஆனால் சிகரட் உற்பத்தி செய்யும் கம்பனிகளின் பிரதான நோக்கமாக அமைவது அவர்களுடைய விற்பனையை மேம்படுத்தி இலாபத்தை அதிகரித்துக் கொள்வதுமே ஆகும். இதற்காக இவர்கள் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொள்வது குறிப்பிடத்தக்கது.
அழகான இளைஞர், யுவதிகளைக் கொண்டு பொது இடங்களில் சிகரட் புகைக்க வைக்கின்றனர். இதன் பிரதான நோக்கம் இளைஞர்களை ஈர்ப்பதாகும்.
சிகரட் விற்பனை செய்யும் கடைகளில் மிகக் கவர்ச்சிகரமான முறையில் சிகரட் பெட்டிகளைக் காட்சிப் படுத்தி வைத்திருத்தல், மேலும் கூடுதலாக சிகரட் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபிே‘கம் என்ற குறியீட்டை வழங்கி அவர்களுக்கு சன்மானங்கள் கொடுத்து ஊக்குவிக்கப் படுகின்றன.
மேலும் சிகரட் விற்பனை செய்யும் கடைகளில் 21 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை தடை என்ற வாசகத்தினை காட்சிப்படுத்தி சிறுவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
அனுசரணை வழங்குதல்
சிகரட் கம்பனியானது பல பொது நிகழ்ச்சிகளுக்கு தங்களின் அனுசரணைகளை வழங்கி நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதுடன் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளினூடாக விளம்பரங்களையும் மேற்கொள்கின்றது.
CSR செயற்றிட்டங்களை மேற்கொள்ளுதல்
2015ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நிலையான விவசாய அபிவிருத்தி செயற்றிட்டத்தை (Sastainable Agriculture Development Project SADP) நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
திரைப்படங்கள்
இளைஞர்கள் விரும்பிப் பார்க்கின்ற திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பணம் கொடுத்து பாடல், வசனம், காட்சி, நகைச்சுவை போன்ற அனைத்து அம்சங்களிலும் சிகரட் விளம்பரங்களை திணித்திருத்தல்.
மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமானது 2015 ஜுன் மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் திரையிடப்பட்ட 18 தமிழ்த் திரைப்படங்களில் மேற்கொண்ட ஆய்வுக்கமைய மொத்தமாக 01 மணித்தியாலம் 15 நிமிடங்கள் சிகரட் விளம்பரங்கள் திரைப்படங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
ஊடக விளம்பரங்கள்
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் போன்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி மிக நுட்பமாக தங்களுடைய விளம்பரங்களை மேற்கொள்ளுதல்.
போலியான ஆய்வுகளை மேற்கொள்ளல்
பொது இடங்களில் இளைஞர்கள் மத்தியில் சிகரட் பாவனையை தூண்டுகின்ற விதத்தில் வினாக்களை கேட்டு சிகரட் பாவனையை தூண்ட முயற்சித்தல்.
சிகரட் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல்
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிஷாந்த டி மெல் 2010ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வுக்கேற்ப அரிசி, மா, சீனி, தேங்காய் போன்ற பொருட்களுக்கு விலையேற்றம் நடந்தாற்போல் சிகரட்டிற்கான விலை அதிகரிப்பு ஏற்படவில்லை. மேலும் சிகரட்டின் விலையின் 70வீத வரியாகக் காணப்படுவதால் அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டிய வரித் தொகையும் இழக்கப்பட்டிருக்கின்றன, அதாவது கடந்த 10 வருடங்களில் 100 பில்லியன் ரூபா அரசாங்கம் இழந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது, ஆய்வின் படி 2010ஆம் ஆண்டில் சிகரட் ஒன்றின் விலை ரூபா 45.00 ஆக இருந்திருக்க வேண்டும் ஆனால் 2016ஆம் ஆண்டிலும் சிகரட் ஒன்றின் விலை ரூபா 35.00 ஆகவே இருக்கின்றது.
இந்நிலையில் இம்முறை வரி அதிகரிப்பின் போதும் சிகரட்டிற்கான வரி அதிகரிக்கப் படவில்லை என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
புகையிலை உற்பத்தியாளர்களை ஊக்கப் படுத்தல்
இலங்கையின் வட, கிழக்கு பகுதி உட்பட, மொனராகலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சூழலுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற புகையிலை உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றனர்.
2011ஆம் ஆண்டு சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் பொருளியற் துறையினரால் ஹங்குராங்கெத்த, வலப்பனை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உட்பட ஊவா மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட்ட புகையிலை உற்பத்தி தொடர்பான ஆய்வின் போது சில கணிப்புக்கள் பெறப்பட்டுள்ளன.
ஏனைய பயிர்ச்செய்கையை விட புகையிலைப் பயிர்ச் செய்கைக்கான செலவு அதி கம், கூடுதலான இரசாயன வகைகளையும், பூச்சிக் கொல்லிகளையும் பாவிக்க வேண்டும்.
புகையிலை உற்பத்தி செய்யப்பட்ட மண் ணில் ஏனைய பயிர்ச்செய்கை மேற்கொள்வது கடினம்.
புகையிலை உற்பத்தியிலிருந்து ஏனைய பயிர்ச் செய்கைக்கு மாறிய கமக்காரர்கள் நிலையானதும், திருப்தியானதுமான இலாபத்தை ஈட்டியிருந்தனர். அத்தோடு ஏனைய பயிர்களுக்கு சந்தையில் பொது இடமும் பேரம் பேரும் வாய்ப்பும் கிடைத்ததாக கமக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
புகையிலை உற்பத்தியிலிருந்து ஏனைய உற்பத்திகளுக்கு மாறிய கமக்காரர்களின் குடும்ப நிலை மற்றும் பிள்ளைகளின் கல்வி நிலையிலும் அபிவிருத்தி ஏற்பட்டிருந்தது.
ஆயினும் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி 2020ஆம் ஆண்டு புகையிலை உற்பத்தியை முற்றாக தடை செய்வதாக தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.சிகரட் பாவனையை தடுக்கும் முறைகள்
சிகரட் பாவனையை தடுப்பதற்கு பிரதான மூன்று முறைகள் காணப்படுகின்றன.
01. பயன் தகு கொள்கைகளை உருவாக்கு தல் (Effective policies)
02. பழகும் முன் காத்தல் (Prevention)
03. உளவியல் சிகிச்சை முறை (Counseling)
பயன் தகு கொள்கைகளை உருவாக்குதல் (Effective policies)
சிகரட் பாவனையைக் கட்டுப் படுத்துவதற்கு சட்ட ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இம்முறை பாவிக்கப் படுகின்றது.
சரியான முறையில் சிகரட்டின் விலையை அதிகரித்தல் மற்றும் வரி அறவீடு செய்தல்.
சிகரட்டிற்கான வரியை உரிய முறையில் அதிகரித்தல்
சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்களை பொறித்தல் மற்றும் சிகரட் பெட்டிகளின் கவர்ச்சியைக் குறைக்க உருவமற்ற, விளம்பரமற்ற சிகரட் பெட்டிகளை அமுலாக்கல் (Plain packaging)
சிகரட்டை கொள்வனவு செய்யக் கூடிய வயதெல்லையை தீர்மானித்தல்.
பழகும் முன் காத்தல் (Prevention)
சிகரட் பாவனையை பழகுவதற்கு முன்னரே அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுத்தலானது மிகப் பயன் கூடியதும், இலகுவானதுமான முறையாகும்.
சிகரட் பாவனையினால் ஏற்படும் இனங்காணக் கூடிய தாக்கங்களை சிறுவர், இளைஞர்களுக்கு புரியவைத்தல்.
இளைஞர்கள், சிறுவர்களை ஏமாற்றுவதற்கு கம்பனிகளினால் மேற்கொள்ளப் படுகின்ற தந்திரோபாயங்கள் தொடர்பாக தெரியப் படுத்தல். அவ்வாறான விளம்பரங்களுக்கு ஏமாறாமலிருப்பதற்குரிய உத்திகளை தெளிவுபடுத்தி வழிகாட்டுதல்.
சிகரட் பாவனை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அதன் உண்மைகளையும் அறியப் படுத்தல்.
உளவியல் சிகிச்சை முறை (Counseling)
சிகரட்டை தற்போது பாவித்து வருபவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக உளவியல் சிகிச்சை முறை பாவிக்கப் படுகின்றது.
உள நல வைத்திய ஆலோசனையின் படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற் கொள்ளலாம்.
01. சிகரட் பாவனையை நிறுத்துவதற்கான நாளொன்றை தீர்மானிக்கவும்
02. இது தொடர்பில் ஏனையோருடன் கலந்துரையாடவும் (மனைவியிடம், பிள்ளை களிடம், நண்பர்களுடன், அயலவர் களுடன்)
03. இறுதியில் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கவும் (சிகரட் பாவனையை நிறுத்தியவுடன் நண்பர்களி டமிருந்து கிடைக் கவிருக்கும் தாக்கங்கள், விேசட தினங்களின் போது நீங்கள் நடந்துக் கொள்ள வேண்டிய முறை பற்றி திட்டமிடுங்கள்
04. சிகரட் பாவனையை நிறுத்த வேண்டு மென்ற தீர்மானத்தை முறியடிக்கவும் சிகரட் பாவனையை தூண்டுவதற்கும் காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூற தயாராகுங்கள் (உதாரணமாக நான் சிகரட் புகைப்பதை நிறுத்திவிட்டேன் என்னை பலவந்தப் படுத்த வேண்டாம் எனக் கூறுங்கள்)
05. சிகரட் பாவனையை நிறுத்திய பின்ன ரும் புகைக்க வேண்டுமென்று மீண்டும் மீண் டும் வரும் ஆசை பற்றியும் சிந்தியுங்கள் (சிகரட் புகைக் காமல் இருப்பது உங்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருமானால் அதனைப் பற்றி அதிருப்தியாக உணராதீர்கள், மீண்டும் நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்)
06. சிகரட்டிலிருந்து விடுதலையான பின்னருள்ள சந்தோஷத்தை அனுபவியுங்கள் அது பற்றி பேசுங்கள்.

புகைப்பதை விட்டு விடுவீர்கள்... 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால்
Reviewed by Author
on
June 24, 2016
Rating:

No comments:
Post a Comment