அண்மைய செய்திகள்

recent
-

வடபகுதியினர் மீதான ஐயப்பாடே இராணுவத்தை நிலைத்து வைத்திருக்க காரணம்....


வட பகுதியிலுள்ளவர்கள் மறுபடியும் போரிடக் கூடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருப்பதனாலேயே இராணுவத்தினரை அவர்கள் வடக்கிலிருந்து அகற்றுவதற்கு தயாராக இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காக்கை தீவுப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் முடிவில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதிக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இராணுவம் நல்லவற்றைச் செய்தாலும் கூட வடக்கை விட்டு வெளியேற வேண்டுமென்பதே எங்களது அடிப்படைக் கருத்தாக இருக்கின்றது. ஆனால் குறிப்பாக எங்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் எந்த விதமான வன்செயல்களிலும் ஈடுபடாமல் இருந்தாலும் கூட எங்கள் மீது அரசாங்கத்தினது சந்தேகங்களும் ஐயப்பாடும் இருந்து கொண்டு தான் இருக்குமென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஐயப்பாட்டின் வெளிப்பாடு தான் இங்கு இராணுவத்தை நிலைத்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் நாடுகின்றதன் அர்த்தம். ஆகவே அவர்களுக்கு நாங்கள் இதனை எடுத்துக் கூற வேண்டும். மேலும் இரு தரப்பினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய சாதனங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி உட்பட இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற பொது மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்பட வேண்டுமென்றும், மயிலிட்டியில் இருக்கின்ற ஆயுதக்கிடங்கையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு மாற்றப்பட்டாலேயே அங்கும் மக்கள் ஆபத்துக்களற்ற வகையில் மீளக் குடியமர முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றேன்.

இவைகளைப் பற்றிக் கவனிப்பதாகவும் இவற்றை நினைவில் வைத்துக் கொள்வதாகவும் முடியுமானவரையில் அது தொடர்பிலான நடவடிக்கையை எடுப்பதாகவும் இராணுவத் தளபதியும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதே வேளை பல விதங்களிலே அவர் எங்களுக்கு நன்மைகளைச் செய்து கொண்டு வருகின்றார். குறிப்பாக வீடுகளைக் கட்டி வருகின்றார். அதாவது இராணுவம் இதுவரை காலமும் இருந்த நிலையை மாற்றி இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையே சுமூகமான உறவை வளர்க்க வேண்டுமென்று நினைக்கின்றார். அதனை நான் வரவேற்கின்றேன். அவருடைய எண்ணங்களும் நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கன என அறிவித்தார்.

என்றாலும் எங்களைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் இராணுவம் குடி கொண்டு இருப்பதை குறைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இங்கு தொடர்ந்தும் அவர்கள் எங்கள் மத்தியில் இருப்பதால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் பற்றி நான் பல தடவைகள் கூறி விட்டேன். ஆகவே எவ்வளவு தான் இராணுவம் எங்களோடு ஒத்துழைத்து நன்மைகளைச் செய்வதாக இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.

அந்தவிதத்திலே நாங்கள் அவர்களுடன் முரண்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாங்கள் அவர்களுடைய தொகையைக் குறைத்து முற்றிலுமாக அகற்றி பொலிஸாரின் கையிலே கொடுக்க வேண்டி இருக்கின்றது பற்றியெல்லாம் நான் அவருக்கு கூறியிருக்கின்றேன். இதற்கெல்லாம் அவர் சொன்னார் இதுவெல்லாம் எங்களுடைய அரசியல் ரீதியிலான சிந்தனைகள் என்று கூறினார்.

இதேவேளை காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் தொடர்பில் நான் அவரிடம் கேட்ட போது புலோப்பளையில் 400 ஏக்கரும் காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதியில் 200 ஏக்கருமாக விரைவிலே விடுவிக்கப் போவதாக கூறியிருக்கின்றார். இதனை ஐனாதிபதி தான் விடுவிக்கப் போகின்றாரோ என்பது தெரியாது. ஆனால் விரைவில் விடுவிப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடபகுதியினர் மீதான ஐயப்பாடே இராணுவத்தை நிலைத்து வைத்திருக்க காரணம்.... Reviewed by Author on June 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.