அண்மைய செய்திகள்

recent
-

பெண்பிள்ளைகள் மீதான துஷ்பிரயோகத்துக்கு காரணம் பெற்றோரின் கவனயீனமே!


சிறுவர்களைப் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோகங்கள், அநீதிகள், வன்புணர்வுகள், பாலியல் இம்சைகள் பற்றியும் உலகெங்கும் பேசப்படுகிறது.

பொதுவாக சிறுவர்கள் என்னும் போது 18 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரையும் குறித்து நிற்கிறது.

இத்தகைய சிறுவர்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக இன்று உலக நாடுகள் பல்வேறு சட்டங்களையும் சமவாயங்களையும் உருவாக்கியுள்ளன.

இருந்தாலும் நாளுக்கு நாள் துஷ்பிரயோக செயல்கள் நடந்த வண்ணமே உள்ளன.

இதிலும் பெண் பிள்ளைகள் மீதான அடக்கு முறைகள், சித்திரவதைகள் பாலியல் துஷ்பிரயோகங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் பெற்றோர் பாதுகாவலர்களின் கவனயீனமேயாகும்.இதனாலேயே இன்று பெண் பிள்ளைகளுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எமது நாட்டில் இடம்பெற்ற வித்யா, ஹரிஸ்ணவி, சேயா போன்ற சிறுமிகளே எடுத்துக்காட்டாக உள்ளனர்.

வயதில் சிறியவர்களாய் இருந்தாலும் பெண் பிள்ளைகள் விபரம் தெரியாதவர்கள். எந்தவொரு விடயத்திற்கும் இலகுவில் இணங்கிச் செல்பவர்கள். இவர்களையே இன்று தமது பழிவாங்கல்களுக்கும் பாலியல் தேவைகளுக்கும் பலர் பயன்படுத்துகின்றார்கள்.

சிறுவயதிலிருந்தே தமது பிள்ளைகளுக்கு அவர்கள் கலாசார, மத விடயங்களை சொல்லிக் கொடுத்து ஆடை அலங்கார விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சிறு வயதில் மேற்கத்தேய உடை அலங்காரங்களுக்கு பழக்கி விட்டு வயதுக்கு வந்ததும் கலாசார உடைகளை அணியும்படி திணிக்கும் போது அவர்கள் உளரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் கூடிய அக்கறை எடுக்க வேண்டும்.

இதேபோல்தான் தமது பிள்ளைகள் யாருடன் பழகுகின்றார்கள் என்பதையிட்டும், அவர்கள் உறவினர்கள் அயலவர்களின் வீடுகளுக்குச் செல்வது குறித்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுடன் நட்பாகப் பழகி நடந்தவைகளைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். பாடசாலைகளுக்குச் செல்லும் போதும் வரும் போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் தூர இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பிள்ளைகளைக் கொண்டு சேர்க்கின்றனர். இதனால் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக களைப்பு போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றாலும் தூர இடங்களுக்கு சென்று தனியாக திரும்புவதாலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலகுவாக ஆளாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதற்கு இடமுண்டு.

இதனைக் கருத்தில் கொண்டுதான் எமது நாட்டு அரசாங்கம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தை அறிமுகம் செய்து கிராமிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது.

இன்று வெளிநாட்டு மோகம் பெண்களை விட்டு வைத்ததாகத் தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படுவது தமது பிள்ளைகள்தான் என்பதை அவர்கள் உணர மறந்து விடுகின்றனர்.

அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து வரும் பணத்தை கணவன்மார் வீண்விரயம் செய்கின்றனர். 'தாய் அற்ற போது சீரற்ற வாழ்வு' என ஆன்றோர் சும்மாவா சொல்லியிருக்கின்றார்கள்!

இதுமட்டுமல்லாமல் பெண் பிள்ளைகள் இன்று பாடசாலைக் கல்வியைத் தொடர்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

ஒருபக்கம் பெண்கள் சாதனை மேல் சாதனை படைக்க மறுபக்கம் பொருளாதார நெருக்கடி, அதிக பெண்பிள்ளைகள் இருத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களால் தமது கல்வியை இடைநடுவே விட்டு விடுகின்றனர்.

பாடசாலை இடை விலகல் காரணமாக அரசும் பெற்றோரும் செலவிடும் முதலிற்குரிய சரியான விளைவு கிடைக்காமல் விடுகிறது.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் 14- தொடக்கம் 17 வயதிற்குட்பட்ட சிறுமிகள் இடைவிலகுகின்றனர்.

குடும்பப் பொறுப்பை காரணமாகக் காட்டி பெற்றோர் இளவயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர்.

பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்ததால்தான் ஐ.நா. சபை 2011ம் ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதியை சர்வதேச பெண்பிள்ளைகள் தினமாக பிரகடனம் செய்து 2012ம் ஆண்டு அதனைக் கொண்டாடியது.

அன்றிலிருந்து இத்தினத்தை உலக நாடுகள் அனுஷ்டித்து வருவதுடன், பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.


பெண்பிள்ளைகள் மீதான துஷ்பிரயோகத்துக்கு காரணம் பெற்றோரின் கவனயீனமே! Reviewed by Author on October 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.