யாழ், வன்னியில் நாளை மாவீரர் நாளுக்குத் தயார் நிலையில் துயிலுமில்லங்கள்
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாளை மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத மாவீரர் துயிலுமில்லங்களை சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் பணிகள், கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கு இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர், அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்டு, அங்கிருந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளும், நடுகற்களும், சிதைக்கப்பட்டன.
அதற்குப் பின்னரும், இந்த இடங்களில் தமிழ்மக்கள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்பதற்காக, துயிலுமில்லங்களின் மீது படைத்தளங்களை அமைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, வன்னியில் உள்ள சில துயிலுமில்லங்களில் இருந்து சிறிலங்கா படையினர் வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம், யாழ்.மாவட்டத்தில் உள்ள உடுத்துறை துயிலுமில்லம் என்பன, நேற்றும் இன்றும், பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களால் துப்புரவு செய்யப்பட்ட துயிலுமில்லங்களில் நாளை மாலை மாவீரர்கள் நினைவாக தீபம் ஏற்றி வணக்கம் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ், வன்னியில் நாளை மாவீரர் நாளுக்குத் தயார் நிலையில் துயிலுமில்லங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 27, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2016
Rating:


No comments:
Post a Comment