அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது-வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்

 மீனவர்களுக்காக   எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் கடற்றொழில் அமைச்சருக்கு பொருத்தமான ஒரு  இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.


-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழன் (09) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


அண்மையிலே ஜனாதிபதி அவர்கள் நாடாளுமன்ற உரையின் போது, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அஸ்வெசும பயனாளிகளுக்கான தற்போதைய அசாதாரண நிலை குறித்துப் பேசியிருந்தார். குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் நிலை காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, விலை ஏற்றங்கள் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதனடிப்படையில், மீனவர்களுக்காக லீட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற விகிதத்தில் எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. ஒரு மீனவனாகவும், குடும்பத் தலைவனாகவும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.


பேசாலை மற்றும் குருநகர் துறைமுக அபிவிருத்தி


மன்னார் - பேசாலை மற்றும் குருநகர் துறைமுகங்கள் தொடர்பான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகிறோம்.

இது தொடர்பாக  ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.பேசாலை துறை முகத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆளுநருடன் பேசப்பட்டதாக தெரியவில்லை. மன்னார் மாவட்ட மீனவ சமாசம் என்ற ரீதியில் பேசாலையில் ஒரு துறைமுகம் அமைய வேண்டும் என்பதில் நாங்கள் அக்கறையோடு இருக்கிறோம். இருப்பினும், பேசாலை மக்கள் சில விடயங்களை முன்வைத்துள்ளனர். 


அரசாங்கம் மற்றும் கடற்றொழில் அமைச்சு அந்த மக்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வரவேண்டும். பேசாலை மக்கள் அதனை நிராகரித்தால், அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து துறை முகத்தை அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.


  2026 அரச வரவு செலவுத் திட்டம் (Budget)


2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மீனவர் தொடர்பாகப் பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால், வடமாகாணத்தில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கூறப்பட்ட எந்த ஒரு செயல்பாடும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடமாகாணத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என்று நாங்கள் நினைக்கத் தோன்றுகிறது.


இந்திய மீனவர் பிரச்சனை


இந்திய மீனவர்களின் வருகை தொடர்ந்து நீடிக்கிறது. அண்மையில் கூட நெடுந்தீவுப் பகுதியில் படகுகள் மற்றும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில படகுகளைக் கைது செய்வதால் இந்தப் பிரச்சனை தீராது. அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு, எமது கடல் எல்லைக்குள் ஒரு இந்தியப் படகும் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடலட்டை பண்ணைகள்


கடலட்டை பண்ணைகள் அமைக்கும் போது   சில விடையங்களை கவனிக்க வேண்டும்.

கண்ட இடங்களில் பண்ணைகளை அமைக்காமல், அதற்குப் பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பண்ணைகளுக்கான அட்டை குஞ்சுகளை இயற்கையான முறையில் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தி நிலையங்களை முதலில் உருவாக்க வேண்டும்.


கடலில் இருந்து அட்டை குஞ்சுகளைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். உற்பத்தி நிலையங்களில் கிடைக்கும் குஞ்சுகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப பண்ணைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.கடற்றொழில் அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம். வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் உங்களின் சார்பாக ஒரு பொருத்தமான இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.





மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது-வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் Reviewed by Vijithan on April 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.