அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் பட்ஜெட் 2017 ஏகமனதாக நிறைவேற்றம்,,,


வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) உறுப்பினர்கள் அனைவரினதும் அங்கீகாரத்துடன் எதிர்ப்பின்றி நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 69 ஆவது அமர்வு கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரும் வடக்கு மாகாண நிதி அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார். ஐந்து நாட்களாக இடம்பெற்று வந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இறுதியாக நேற்று கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் பட்ஜெட் மீதான விவாதம் இடம்பெற்று, இரு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளும் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் வடக்கின் மொத்த பாதீட்டையும் ஏற்குமாறு சபையில் அவைத்தலைவர் கூறினார். இதனை அடுத்து உறுப்பினர்களின் எதிர்ப்பின்றி பட்ஜெட் நிறைவேற்றப்ப டுவதாக அறிவித்தார்.

சுகாதார அமைச்சு டென்மார்க்கின் நிதியுதவியினை பெற்று பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு கனடா நாட் டில் சர்வதேச சுகாதார மாநாடு ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளது. விவசாய அமைச்சு காற்றாலை திட்டம், மரம் நடுகை திட்டம் என்பவற்றை கடந்த வருடம் முன்னெடுத்திருந்தது, வடக்கு நீரியல் நிலையை ஆராய்வதற்கென அடுத்த வருடம் யாழில் சர்வதேச மாநாடு ஒன்றையும் விவசாய அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

இதேபோன்று கல்வி அமைச்சும் பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் மற்றும் பல திட்டங்களையும், மீன்படி அமைச்சு போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி ஆகி யவற்றில் கூடிய கவனம் செலுத்தியுள்ளன.

கடந்த 14 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் மாகாண பேரவை செயலகம் ஆகியவற்றுக்கான செலவீன தலைப்பு தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதில் ஆளுநர் செயலகத்திற்கான 59 மில்லியன் மற்றும் 30.9 மில்லியன் ரூபாயும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கான 28 மில்லியன் ரூபாயும், மாகாண பேரவை செயலகத்திற்கான 314.2  மில்லியன் ரூபாயு மான செலவீனங்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
கடந்த 24-ம் திகதி நடைபெற்ற அமர்வில் முதலமைச்சர், அமைச்சுக்கள் மற்றும் பிரதம செயலாளர் செலவீனங்கள் தொடர்பிலான விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் முதலமைச்சர் அமைச்சிற்கு மீண்டுவரும் செலவீனமாக 2430.611  மில்லியன், மூலதன செலவீனமாக 301.5 மில்லியனும், பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு மீண்டுவரும் செலவீனமாக 872.78 மில்லியனும், மூலதன செலவீனமாக 393.38 மில்லியனும் சபையினால் அங்கீகாரம் வழங்கப்ப ட்டது.
21 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் முதலமைச்சர் அமைச்சும் மீதான விவாதம் தொடர்ந்திருந்ததோடு விவசாய அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது. இதில் விவசாய அமைச்சுக்கு மீண்டுவரும் செலவீன மாக 983.784 மில்லியனும், மூலதன செலவீனமாக 289.5 மில்லியனுக்கும் அன்றைய தினம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

மறுநாள் 22 ஆம் திகதி சுகாதார அமைச்சு மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார அமைச்சுக்கு மீண்டுவரும் செலவீனமாக 5267.45 மில்லியனும், மூல தன செலவீனமாக 786.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. நேற்றைய தினம் கல்வி மற்றும் மீன்படி அமைச்சு மீதான விவாதங்கள் இடம்பெற்றன.

இதில் கல்வி அமைச்சுக்கு மீண்டுவரும் செலவீனமாக 9670.871 மில்லியனும், மூலதன செலவீனமாக 666.5 மில்லியனும், மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப அமைச்சிற்கு மீண்டுவரும் செலவீனமாக 420.726 மில்லியனும், மூலதன செலவீனமாக 293 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரமும் நேற்று வழங்கப்பட்டது.  அனைத்து அமைச்சுக்களுக்கான மொத்த ஒதுக்கீடு 22 ஆயிரத்து 728. 117 மில்லியனாகும்.

வடக்கு மாகாணத்திற்கு 2016ஆம் ஆண்டுக்கான மூலதன செலவாக 8 ஆயிரத்து 818 மில்லியன் வழங்கப்பட்ட போதும் 2017ஆம் ஆண்டுக்கான மூலதன செலவீனமாக 5 ஆயிரத்து 618 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் இடையில் 3 ஆயிரத்து 200 மில்லியன் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

இதேபோன்று 2016ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனமாக 16 ஆயிரத்து 174 மில்லியனும், 2017ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனமாக 16 ஆயிரத்து 476  மில்லியனும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட மீண்டுவரும் செலவீனத்திற்காக வழங்கப்பட்ட தொகை இம்முறை அதிகமாக காணப்பட்ட போதிலும் மூலதன செலவீனம் மற்றும் மீண்டுவரும் செலவீனங்களுக்காக வழங்கப்பட்ட தொகையின் ஒட்டுமொத்த அடிப்படையில் 2 ஆயிரத்து 898 மில்லியன் ஒட்டுமொத்தமாக குறை க்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையுடன் தொடர்புடைய செலவில், மாகாண சபையூடான செலவு 22 ஆயிரத்து 728  மில்லியன் ரூபாயும், ஏனைய திணைக்களங்களுடனான செலவு 2 ஆயிரத்து 734 மில்லியன் ரூபாயும், மொத்தம் 25 ஆயிரத்து 462 மில்லியன் ரூபாயும் செலவிடப்படவுள்ளது.
இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்று வடக்கு சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பட்ஜெட் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரத்தை பெறுவதற்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் 2017 ஆண்டுக்கான செலவீனங்களின் எழுத்தாணையை வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு முதலமைச்சர் அறிவிப்பார். அதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மேற்படி புதிய பட்ஜெட் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31-ம் திகதி வரைநடை முறைப்ப டுத்தப்படும் என அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.   

வடக்கின் பட்ஜெட் 2017 ஏகமனதாக நிறைவேற்றம்,,, Reviewed by Author on December 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.