பனையுடன் மோதி பேருந்து விபத்து -4 பேர் காயம்
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையப்பிரிவிலுள்ள முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி பகுதியில் கோடாலிக் கல்லு வீதி வளைவில் திரும்பிய போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவுச் சாலைக்குச் சொந்தமான பேருந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றுள்ளது, இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றவர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் பேருந்தின் நடத்துநரான ஜீ.கிறேஸ்குமார் (வயது - 25) உட்பட பயணிகள் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் விரைந்த சென்ற முள்ளியவளைப் போக்குவரத்துப் பொலிஸார் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பனையுடன் மோதி பேருந்து விபத்து -4 பேர் காயம்
Reviewed by Author
on
January 23, 2017
Rating:

No comments:
Post a Comment