மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்பட கூடாதெனில்..
மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்பட கூடாதெனில் மக்கள் பெருமையடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்கத்தினை நோக்கி நாம் அனைவரும் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம், இந்த நிலை தொடர வேண்டும் என்றால் நாம் இலங்கையர் என்ற நிலையில் அனைத்து மக்களும் செயற்பட்டு அனைவருக்கும் சாதகமான அரசியல் சாசனத்தினை கொண்டுவர அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
நாட்டில் நல்லிணக்கம் அவசியம் எனில் புதிய அரசியல் சாசனம் ஒன்று தேவைப்படுகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கொடிய யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அன்று ஏற்பட்ட யுத்தத்தினால் மக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறு வன்முறையோ, கெடுதிகளோ நாட்டில் இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடாது, அதனை யாரும் விரும்பவும் மாட்டார்கள். அந்த கொடிய யுத்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு ஏற்படக்கூடாது எனில் தற்போது அமைக்கப்படவுள்ள அரசியல் சாசனம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் பெருமையடையும் விதத்திலும் அமையவேண்டும். இதற்காக அனைத்து மக்களும் ஒன்றாக செயற்பட வேண்டியது அவசியம்.
இந்த வகையில் சாசனம் அமையப்பெற்றால் நாட்டினை பிரிக்கும் அல்லது பிளவடைய செய்யும் நிலைமை ஏற்படாது, அதற்கான முழு முயற்சிகளையும் ஒத்துழைப்பினையும் தாங்கள் தந்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்பட கூடாதெனில்..
Reviewed by Author
on
January 19, 2017
Rating:

No comments:
Post a Comment