காணாமல் போனவர்கள் குறித்து ஆராய தயார் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்கேயாவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீலிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்குமுன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேடகுழு விரைவில் நியமிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரத்தின புரம், கூனித்தீவு, கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 4,253 மக்களுக்கு சேவையாற்றுவதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்பூர் மாவட்ட வைத்தியசாலை நேற்று முற்பகல் ஜனாதிபதியினால் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.
56 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடனும் இந்த நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் நினைவு படிகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
வைத்தியசாலையில் முதலாவதாக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பதிவு செய்த ஜனாதிபதி பொதுக் கூட்டத்தில் விசேட உரையாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீலிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும், இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படும்.
2015ஆம் ஆண்டில் நான் யாழில் உள்ள பாடசாலை மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு தன்னுடன் இருந்த இந்த பிள்ளை காணாமல் போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகும். அவ்வாறு அந்த பிள்ளைகள் காணாமற் போயிருந்தால் அவர்களை தேடுவதற்காக நானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவேன்.
கடந்த 18 ஆம் திகதி நான் கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய இருந்ததாகவும், தன்னை வர விட முடியாதென வடக்கில் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அன்றைய தினம் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை. பெற்ற சுதந்திரம் மற்றும் சமா தானத்தின் பெறுமதியை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நானும் பிரதமரும் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை நான் தாமதப்படுத்தவில்லை. பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டும் என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்கள் குறித்து ஆராய தயார் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 21, 2017
Rating:

No comments:
Post a Comment