தமிழர்களின் அரசியல் அனைத்திலும் பின்னிப் பிணைந்தது: சிறீதரன்
கூட்டுறவு வாழ்க்கையின் அடிப்படையில் எங்களுக்கான அரசியல் ரீதியான முடிவுகள் பற்றிச் சிந்திக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற 95ஆவது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
கூட்டுறவு என்பது உலகில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றது. அது போல இந்த மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் கூட்டுறவின் வரலாறுகளை கண்டிருக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த போது கூட்டுறவு மேலோங்கி இருந்தது. இன்று கூட்டுறவு என்பது பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றது, இவ்வாறான கூட்டுறவை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
எமது மாவட்டத்திலுள்ள ஆனையிறவு உப்பளத்தை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அது கைகூடவில்லை.
தமிழர்களின் அரசியல் என்பது எல்லா விடயங்களிலும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. அதனால் தான் ஒரு காலத்தில் விடுதலைப் பயணங்களின் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்தக் கூட்டுறவின் ஊடாக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
கூட்டுறவு வாழ்க்கையின் அடிப்படையில் தான் எங்களுக்கான அரசியல் ரீதியான முடிவுகள் பற்றிச் சிந்தித்திருக்கின்றோம்.
பல்வேறுபட்ட போராட்டங்களுக்கு முகங்கொடுத்த வகையில் எங்களுடைய வாழ்க்கை காணப்படுகின்றது. ஆனால் தென்னிலங்கையில் இருக்கின்ற அரசியல் சூழல் என்பது வித்தியாசமாகச் செல்கின்றது.
அங்கிருக்கின்ற அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், அமைச்சுக்களை வேறு திசைகளில் கொண்டு செல்லுதல், ஒரு அமைச்சர் விலகினால் இன்னொரு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது போல எங்களுக்கான அரசியல் தீர்வை வளர்ப்பதில் மாற்றுக் கருத்துக்களை வழிநடத்தி வருவதாகவே எமது மக்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு 1987ஆம் ஆண்டுகளில் அதிக கவனத்தைச் செலுத்திய இந்தியா, இப்போது கூட மௌனங்களைக் கலைந்து வெளிப்படையான கவனத்தைச் செலுத்த வேண்டுமென்ற கருத்தை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
தமிழர்களின் அரசியல் அனைத்திலும் பின்னிப் பிணைந்தது: சிறீதரன்
Reviewed by Author
on
August 16, 2017
Rating:

No comments:
Post a Comment