தமிழ் உச்சரிப்பு தெரியவில்லை! சீ.வி ஆதங்கம்
தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் உச்சரிக்கத் தெரியவில்லை. லகர, ளகர, ழகர வேறுபாடுகள் மற்றும் ன, ந, ண போன்றவற்றின் வேறுபாடு தெரிவதில்லை." என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கியநடை நிறைந்ததாக முறையான உச்சரிப்புடன் கூடியதாக அமைந்திருக்கும்.
ஆனால் இப்போதோ வானொலிப் பெட்டியை அல்லது தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பினால் அங்கு பேசப்படுகின்ற தமிழை எப்படி வர்ணிப்பதென்று எமக்குப் புரிய வில்லை. சில திரைப்படங்கள் கூட இவ்வாறான பிழைகளைவிட ஊக்குவிக்கின்றன. அவர்களின் பேச்சில் ஆங்கிலம் அறுபது சதவீதம் தமிழ் நாற்பது சதவீதம் என்று காணப்படுகின்றது.தமிழ் கொல்லப்படுகின்றதா என்று ஏங் வேண்டியுள்ளது.
மொழிக்கல்வியில் நீங்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். எம்மெல்லோரையும் பிணைப்பது எமது மொழியே. அந்த மொழியில் பாண்டித்தியம் அடைவது இன்றியமையாதது. கணிதம், விஞ்ஞானம், புவியியல், வரலாறு போன்ற பாடங்களிலும் நீங்கள் கூடிய கவனம் செலுத்துவதன் மூலமே உலகைப் பற்றியும் எம்மைப் பற்றியும் எமது சூழலைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் மருத்துவராக, பொறியியலாளராக, சட்டத்தரணியாக, ஆசிரியராக ஏதோ ஒன்றாக வர முடியும்.
ஆனால் எம்மைப் பற்றியும் சூழலைப் பற்றியும் எமது அரசியல் நிலமை பற்றியும் அறிந்து கொண்டால் மட்டுமே எமது வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.பரந்த அறிவு இன்று எம் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. அந்தப் பரந்த அறிவைப் பெறுவதற்கு கணினியறிவு போதுமான அனுசரணை வழங்கி வருகிறது என” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் உச்சரிப்பு தெரியவில்லை! சீ.வி ஆதங்கம்
Reviewed by Author
on
October 26, 2017
Rating:
No comments:
Post a Comment