புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறியவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள எம்.பி
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறிய சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதில் வடக்கின் அடுத்த முதலமைச்சராகக் கூடிய முழுத் தகுதியும் மாவை சேனாதிராஜாவுக்கே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,சம்பந்தனின் செயற்பாடுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆரம்பத்திலிருந்தே ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறிய சம்பந்தனை அவர் தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார். சம்பந்தனின் பணிப்பின் பேரில் சுமந்திரன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று அங்கே சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணைக்குச் சந்தர்ப்பம் கொடுங்கள் என வெளிநாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது மகிந்த ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்ஷவும் சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முக்கிய காரணம்
இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாணசபை முறைமையை நாங்கள் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், வடக்கு மாகாணசபையை அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கின்ற, தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படுகின்ற ஒரு பிழையான தரப்புக் கைப்பற்றுவதற்கு எமது மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.
வடக்கு, கிழக்குப் பிரிப்பை நிரந்தரமாக்கின்ற, சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்ற, சமஸ்டியை முற்றாக நிராகரிக்கின்ற ஒரு அரசியலமைப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என்பதனை வடக்கு மாகாண சபையில் ஒரு அரசியல் தீர்மானமாக எடுத்து சர்வதேசளவில் அந்தத் தீர்வை எடுத்துச் சென்று பிரசாரப்படுத்துகின்ற செயற்பாடுகள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறியவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள எம்.பி
Reviewed by Author
on
October 30, 2017
Rating:

No comments:
Post a Comment