பிறந்த சிசுவை கொன்று புதைத்த தாய் :வவுனியாவின் சம்பவம்!
வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்தில் பிறந்தவுடனேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட குறித்த சிசுவின் சடலம் நேற்று பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவைப் பிரசவித்த தாய் மற்றும் பாட்டி ஆகியோரே அச்சிசுவை கொன்று புதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே குறித்த சிசுவை பிரசவித்த நிலையில் தான் பிரசவித்த சிசுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அது தொடர்பில் தனது தாயாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர்.
குழந்தையைப் பிரசவித்த பெண்ணுக்கு அதிகளவில் இரத்தோட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மருத்துவமனை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து சிசுவைப் பிரசவித்த பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிசுவின் தாய் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை சிசுவினை கொலை செய்த பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றார் என்றும் இவர்களுக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே இவர் மற்றுமொரு சிசுவைப் பிரசவித்து அதனைக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா பொலிஸார், வவுனியா மஜிஸ்திரேட் வி.ராமகமலன் மற்றும் வவுனியா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ரீ.பார்திபன் ஆகியோர் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த சிசுவை கொன்று புதைத்த தாய் :வவுனியாவின் சம்பவம்!
Reviewed by Author
on
November 25, 2017
Rating:

No comments:
Post a Comment