அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலுள்ள ஈழ அகதிகளின் அவல நிலை! ஐ.நா விடுத்த அவசர கோரிக்கை -
மனுஸ்தீவில் அவுஸ்திரேலிய அரசு நிர்வகிக்கும் தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள உணவு, குடி நீர், மருத்துவ வசதி மீண்டும் வழங்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் சபை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், மனிதாபிமான அவசர நிலை உருவாவதைத் தடுக்க வேண்டும் எனவும், அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் ஐ.நா மனித உரிமைகள் சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் திகதியுடன் லோம்பரம் (Lombrum) கடற்படை தளத்தில் அமைந்துள்ள முகாம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது.
ஆனால் அவுஸ்திரேலிய அரசின் மாற்று முகாம் தங்களுக்கு பாதுகாப்பான இடமல்ல எனத் தெரிவித்து, குறித்த முகாமில் இருக்கும் புகலிட கோரிக்கையாளர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, அகதிகளை வெளியேற்றும் விதமாக உணவு, குடி நீர், மருத்துவ வசதிகளை அவுஸ்திரேலிய அரசு துண்டித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் பேச்சாளர் ரூப்பெர்ட் கோல்வில்லே கருத்து தெரிவிக்கையில்,
“முகாமில் உள்ள 600 அகதிகளுக்கும் உடனடியாக உணவு, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை அவுஸ்திரேலிய அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
முகாம் வளாகத்தை விட்டு வெளியேறினால் உள்ளூர் வாசிகளின் தாக்குதல்களுக்கு இலக்காக நேரிடும் என அகதிகள் சொல்கின்றனர். கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் 1951 அகதிகள் உடன்பாட்டின் கீழ் இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவுஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா அரசுக்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அகதிகள் தண்ணீரை குப்பைத் தொட்டிகளில் நிரப்பி வைத்து குடிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இம்முகாம் மூடப்படுவது கடந்த மே மாதமே அனைவருக்கும் தெரியும் எனக் கூறியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்,
“மனுஸ் முகாமை நரகம் என்று கூறி வந்தவர்கள், இம்முகாம் மூடப்படுகின்ற போது திறக்கக் கோருகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
இதனிடையே, படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் இனி ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்றவர்கள் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலுள்ள ஈழ அகதிகளின் அவல நிலை! ஐ.நா விடுத்த அவசர கோரிக்கை -
Reviewed by Author
on
November 05, 2017
Rating:

No comments:
Post a Comment