தென்கொரியா: மருத்துவமனை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
தென்கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் 80-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தென்கொரியா நாட்டின் மிர்யாங் நகரில் உள்ள சேஜாங் மருத்துவமனையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இங்குள்ள 6 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நர்சிங் ஹோம் இயங்கி வந்தது.
இதய நோய் சிகிச்சை அறையில் இருந்து பற்றிய தீயானது மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் மளமளவென வேகமாக பரவியது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு 200 பேர் வரை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்ததாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியாகின. மேலும், மருத்துவமனையில் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 80-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிபத்தை தொடர்ந்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியா: மருத்துவமனை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
Reviewed by Author
on
January 27, 2018
Rating:

No comments:
Post a Comment